Last Updated : 13 Dec, 2022 05:09 AM

 

Published : 13 Dec 2022 05:09 AM
Last Updated : 13 Dec 2022 05:09 AM

FIFA WC 2022 | அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை - மாயாஜாலம் நிகழ்த்தப்போவது மெஸ்ஸியா, மோட்ரிச்சா?

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி அங்கம் வகிக்கும் அர்ஜெண்டினா அணி, லூக்கா மோட்ரிச்சின் குரோஷியாவை எதிர்த்து விளையாடுகிறது.

2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2-வது இடம் பிடித்த குரோஷியா இம்முறை கத்தாரில் கோப்பையை வெல்லக்கூடிய பிரதான அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் அணியை கால் இறுதி சுற்றில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீழ்த்தியது. கூடுதல் நேரத்தில் ஒரு கோல் வாங்கிய போதிலும் கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் பதில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தது. தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட்டில்4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 5 முறை சாம்பியனான பிரேசிலை தொடரில் இருந்து வெளியேற்றி இருந்தது குரோஷியா அணி.

எப்போதுமே கணிப்புகள் குரோஷியாவுக்கு எதிராக இருந்தாலும் நம்பிக்கை தளராமல் போராடும் குணத்தை அந்த அணி ஒருபோதும் விட்டுக்கொடுத்தது இல்லை. இதுவே குரோஷியாவை தொடர்ச்சியாக 2-வது முறையாக அரை இறுதிசுற்றில் கால்பதிக்க வைத்துள்ளது. அந்த அணியை குறைத்து மதிப்பிட்டால் அர்ஜெண்டினாவுக்கு ஆபத்தையே விளைவிக்கக்கூடும்.

37 வயதான லூகா மோட்ரிச் ஒட்டுமொத்த குரோஷியா அணிக்கும் உந்துதல் சக்தியாக திகழ்கிறார். டிஃபன்டர் போர்னா சோசா அணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து எந்த வீரரும் இடைநீக்கம் செய்யப்படவில்லை. காயம் பற்றிய கவலைகள் ஏதுமின்றி பயிற்சியாளர் ஸ்லாட் கோடாலிக்கின் மேற்பார்வையில் குரோஷியா அணி நம்பிக்கையுடன் முழு அளவில் அர்ஜெண்டினாவை எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.

லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி 1986-ல் டீகோ மரடோனாவுக்கு பின்னர் பட்டம் வெல்வதற்கான தீவிர வேட்டையில் உள்ளது. 1978-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி 36 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மகுடம் சூடும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அந்த அணியின் டிபன்டர்களான மார்கஸ் அகுனா, கோன்சாலோ மான்டீல் ஆகியோர் லீக் சுற்றிலும், கால் இறுதியிலும் மஞ்சள் அட்டை பெற்றதால் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் இவர்கள் இருவரும் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் களமிறங்க முடியாது. இது அர்ஜெண்டினா அணிக்கு சற்று பின்னடைவாக கருதப்படுகிறது. மார்கஸ் அகுனாவுக்கு பதிலாக நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ இடம் பெறக்கூடும். அதேவேளையில் கோன்சாலோ மான்டீலுக்கு பதிலாக நஹுவேல் மோலினாவை பயன்படுத்தக்கூடும். மோலினா, நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மான்டீலுடன் இணைந்து டிபன்டராக செயல்பட்டார். மேலும் அந்த ஆட்டத்தில் அவர், 35-வது நிமிடத்தில் கோல் அடித்தும் அசத்தியிருந்தார்.

அனுபவமிக்க ஏஞ்சல் டி மரியாவின் இடமும், அவரது உடற்தகுதியும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. 34 வயதான அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் கத்தாரில் இதுவரை மாற்று வீரராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார். 35 வயதான லயோனல் மெஸ்ஸி, ஏறக்குறைய தனது கடைசி உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். கால்பந்து உலகில் அவருக்கு எட்டாக்கனியாக உள்ள உலக சாம்பியன் பட்டத்தை இம்முறை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற பேராவலையும், தேசத்தின் பாரத்தையும் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.

மேலும் எல்லா காலத்திலும் சிறந்த அர்ஜெண்டினா வீரர் என்ற பட்டத்திற்கு டீகோ மரடோனாவுடன், மெஸ்ஸி ஒப்பிடப்பட்டு வருகிறார். இந்த புகழ்ச்சி உலக சாம்பியன் பட்டம் இல்லாமல் முழுமை அடையாது. மறைந்த ஜாம்பவான் மரடோனா 36 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட தனி வீரராக அணிக்கு பட்டம் வென்றுகொடுத்தார். அதேபோன்றதொரு செயல்திறனைஅர்ஜெண்டினாவின் ஒட்டுமொத்த மக்களும் மெஸ்ஸியிடம் எதிர்பார்க்கிறார்கள். அதற்குதகுந்தவாறு மெஸ்ஸியின் ஆட்டம்இம்முறை அமைந்துள்ளது.

அர்ஜெண்டினா அணியானது கால் இறுதி ஆட்டத்தில்நெதர்லாந்துக்கு எதிராக 2-0என்ற கோல் கணக்கில் ஆதிக்கம் செலுத்திய போதிலும்கடைசி 7 நிமிடங்களில் 2 கோல்களை வாங்கியது. கூடுதல் நேரத்திலும் அர்ஜெண்டினா வெற்றியை வசப்படுத்தவில்லை.பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் நெதர்லாந்தின் கோல் அடிக்கும் இரு வாய்ப்புகளை தகர்த்ததால் 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி கண்டது.

இன்றைய மோதலில் கூடுமானவரையிலும் அர்ஜெண்டினாஅணி பெனால்டிஷூட்அவுட்டுக்கு ஆட்டத்தைஎடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதில் தீவிர முனைப்புடன் செயல்படக்கூடும். ஏனெனில் பெனால்டி ஷூட் அவுட்டில் குரோஷியா அணி வலுவாக செயல்படக்கூடியது. 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக்கோப்பை தொடரில் குரோஷியா அணிஇரு முறை பெனால்டி ஷூட் அவுட், ஒருகூடுதல் நேர ஆட்டம் வாயிலாகவே இறுதிப் போட்டியில் நுழைந்திருந்தது.

கத்தாரில் இம்முறை குரோஷியா அணிஜப்பான் அணிக்கு எதிராகவும், பிரேசிலுக்குஎதிராகவும் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றிபெற்றே அரை இறுதியில் கால் பதித்துள்ளது. புள்ளி விவரங்கள் அடிப்படையில் குரோஷியா அணியானது ஆட்டத்தை பெனால்டி ஷூட் அவுட்டுக்கு எடுத்துச் சென்றால் அர்ஜெண்டினா அணிக்கு சிக்கல் ஏற்படக்கூடும். மாயாஜாலம் நிகழ்த்தப்போவது மெஸ்ஸியா, மோட்ரிச்சா என்பதை இன்று இரவு பார்க்கலாம்.

3-வது முறையாக மோதல்..: உலகக் கோப்பைகளில் அர்ஜெண்டினா – குரோஷியா அணிகள் 3-வது முறையாக மோதுகின்றன. 2018-ம் ஆண்டு தொடரில் லீக் சுற்றில் அர்ஜெண்டினாவை 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா வீழ்த்தியிருந்தது. 1998-ம் ஆண்டு தொடரில் குரோஷியாவை 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வென்றிருந்தது.

> அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி 2-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதில் முனைப்புடன் உள்ளார். 2014-ல் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த இறுதி ஆட்டத்திலும் மெஸ்ஸி பங்கேற்றிருந்தார். கிளப்களில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ள மெஸ்ஸி, தேசிய அணிக்காக கோபா அமெரிக்கா பட்டம் மட்டுமே வென்றுள்ளார். அவரது கோப்பை சேகரிப்பில் உலக சாம்பியன் பட்டம் மட்டுமே வறட்சியாக உள்ளது.

> பெனால்டி ஷூட்அவுட்களில் குரோஷியா சிறந்த சாதனையை வைத்துள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணி போட்டியிட்ட 4 பெனால்டி ஷூட் அவுட்டிலும் வெற்றி கண்டுள்ளது.

> 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோல்வியடைந்த குரோஷியா தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடுகிறது.

> அர்ஜெண்டினாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ச்சியாக 2-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதிக்கும். இந்த வகையிலான சாதனையை 2002-ல் பிரேசில் அணி நிகழ்த்தியிருந்தது.

> அர்ஜெண்டினா அணி லீக் சுற்றை சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய போதிலும் அதன் பின்னர் பங்கேற்ற 4 ஆட்டங்களிலும் 3 கோல்கள் மட்டுமே வாங்கியுள்ளது.

> இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அர்ஜெண்டினா அணி 6-வது முறையாக அரை இறுதியில் விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x