Published : 06 Oct 2022 03:20 PM
Last Updated : 06 Oct 2022 03:20 PM

டி20 உலகக் கோப்பை தொடருக்கு புறப்பட்ட இந்திய அணியின் உற்சாக க்ரூப் போட்டோ!

இந்திய அணி.

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் விதமாக ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அதை முன்னிட்டு இந்தியா அணி வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு போட்டோவுக்கு உற்சாகமாக போஸ் கொடுத்துள்ளனர். அது இணைய வெளியில் பரவலான மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெறும் இந்தத் தொடரில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. 45 போட்டிகள் இதில் அடங்கும். முதல் சுற்று, சூப்பர் 12 மற்றும் நாக்-அவுட் என இந்தத் தொடர் நடைபெறுகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் உள்ளன. இந்தப் பிரிவில் முதல் சுற்றில் வென்று வரும் இரண்டு அணிகளும் இணைய உள்ளன.

வரும் 16-ம் தேதி இந்தத் தொடர் தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வரும் 23-ம் தேதி தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்தச் சூழலில் ஆஸ்திரேலியாவில் பயிற்சி ஆட்டம் மற்றும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி முன்கூட்டியே புறப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் மற்றும் அணியின் பயிற்சியாளர்கள் உட்பட பலர் போட்டோவுக்கு உற்சாக போஸ் கொடுத்துள்ளனர். ஒரு பக்கம் இந்திய அணிக்காக களத்தில் கில்லியாக செயல்பட உள்ள வீரர்களும், மறுபக்கம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பயிற்சியாளர் உட்பட அணியின் ஊழியர்களும் உள்ளனர்.

இந்த போட்டோவில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, தினேஷ் கார்த்திக், சஹால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்ஷல் படேல், புவனேஸ்வர் குமார், அஸ்வின், தீபக் ஹூடா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகிய 14 வீரர்கள் உள்ளனர். இந்திய அணியில் பும்ராவுக்கு மாற்றாக இடம் பெற போகும் வீரர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவர்களைத் தவிர ரிசர்வ் வீரர்களும் அணியில் உள்ளனர். அவர்களும் விரைவில் அணியுடன் இணைவார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x