Published : 08 Sep 2022 09:15 AM
Last Updated : 08 Sep 2022 09:15 AM

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்: ரோஹித் சர்மா பேட்டி

ரோஹித் சர்மா

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். அதுவே எங்களது தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறினார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகளில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் தோல்வி கண்டு வெளியேறின.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின.

இதில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடவேண்டும். இதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும். தற்போது 2 ஆட்டங்களிலும் இந்தியா தோல்வி கண்டுள்ளது. எனவே இறுதிச் சுற்று வாய்ப்பு இந்தியாவுக்கு மங்கிவிட்டது..

தோல்வி குறித்து ரோஹித் சர்மா கூறியதாவது: இலங்கைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் நாங்கள்10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். 11-வது ஓவருக்குப் பிறகு நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை.

பெரிய ஸ்கோரைஎடுத்து பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என நினைத்தோம். ஆனால், இலங்கைக்கு எதிராக எங்களது திட்டம் பலிக்கவில்லை. இலங்கை வீரர்கள் நீண்டநேரம் நின்று சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றியை எங்களிடமிருந்து பறித்து விட்டனர்.

இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசினார். யுவேந்திர சாஹல், புவனேஸ்வர் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினர்.

இந்தத் தொடரில் நாங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன. கடந்த தொடர்களில் விளையாடும் போது சில பிரச்சினைகளுக்கான பதில்களைக் கண்டுபிடித்துள்ளோம்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்சை விட்டதால் அர்ஷ்தீப் ஏமாற்றமடைந்தார். இதுபோன்ற தோல்விகள்தான் அணி எப்படி ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பதைப் புரியவைக்கும்.

இந்த ஆட்டத்தில் தீபக் ஹூடாவை கொண்டு வரலாம் என்று நினைத்தோம். ஆனால் அது நினைத்தபடி நடக்கும் என்றுதோன்றவில்லை. அவேஷ் கானுக்கு உடல்நலம் சரியில்லாமல்போய்விட்டது. உலகக்கோப்பையின் போது அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்.ஹர்திக் பாண்டியா, 4வது வேகப்பந்து வீச்சாளராக இருப்பதையே விரும்புகிறோம்.

இந்தத் தொடரில் அடுத்தடுத்து 2 தோல்விகளைத்தான் அடைந்துள்ளோம். கடந்த உலகக்கோப்பைக்குப் பிறகு நாங்கள் அதிகபோட்டிகளில் தோல்வி அடையவில்லை. கடந்த 2 ஆட்டங்களையும் நெருங்கி வந்துதான் தோற்றுள்ளோம். ஆசியக் கோப்பையில் எங்களுக்கு நாங்களே கொஞ்சம் அழுத்தம் கொடுக்க விரும்பினோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x