Published : 07 Sep 2022 11:37 PM
Last Updated : 07 Sep 2022 11:37 PM

ஆசிய கோப்பை | ஆப்கனை வீழ்த்தி இந்திய அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது பாகிஸ்தான்

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது பாகிஸ்தான். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவை ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணியின் பட்டியலிலிருந்து வெளியேற்றி உள்ளது பாகிஸ்தான்.

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். அதன் காரணமாக 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை பாகிஸ்தான் விரட்டியது.

பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற பேட்ஸ்மேன்களை விரைந்து அவுட் செய்தது ஆப்கானிஸ்தான். குறிப்பாக சீரான இடைவெளியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தனர் அந்த அணியின் பவுலர்கள். அதன் காரணமாக ஆட்டத்தின் கட்டுப்பாட்டை இரு அணிகளும் மாறி மாறி கொண்டிருந்தன. கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது.

அதே நேரத்தில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதனால் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அந்த கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தையும் சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்தார் நசீம் ஷா. அதன் மூலம் பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த அணியின் வெற்றி காரணமாக சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய நடப்பு ஆசிய சாம்பியனான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேற்றப்பட்டு உள்ளது. வியாழன் (செப்.8) அன்று இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x