Published : 09 Aug 2022 09:12 PM
Last Updated : 09 Aug 2022 09:12 PM

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய 7 இந்திய வீரர்களுக்கு பதக்கம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய 7 இந்திய வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான வரவேற்புப் பாடலில் அணிந்து இருந்த கருப்பு உடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தனிநபர் போர்டு பிரிவில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. 5 போர்டுகளில் ஓபன், பெண்கள் என்று 30 பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில் தனிநபர் போர்டு பிரிவில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிகால் சரின் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். அர்ஜூன் எரிகாசி வெள்ளிப் பதக்கமும், நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பெண்கள் பிரிவில் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்மிக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஸ்டைலிஷ் டீம் விருது: ஆடவருக்கான மோஸ்ட் ஸ்டைலிஷ் டீம் விருதை உஸ்பெகிஸ்தான், மங்கோலியா அணிகளுக்கு வழங்கப்பட்டது. மகளிருக்கான மோஸ்ட் ஸ்டைலிஷ் டீம் விருதை டென்மார்க் அணி வென்றது. ஃபேர்-பிளே விருது ஜமைக்கா நாட்டை சேர்ந்த வீரருக்கு வழங்கப்பட்டது.

ஒருங்கிணைப்புக் குழு சிறப்பிப்பு: இந்த நிகழ்ச்சி செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்று இருந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு அளித்து சிறப்பு செய்தார். இதன்படி முதல் கிராண்ட மாஸ்டர் மானுவல் ஆரோன், தலைமைச் செயலாளர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் சிறப்பு செய்தார்.

தம்பி: முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடர்பான வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க பணிகள் தொடங்கி செய்யப்பட்ட பல்வேறு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வீடியோ வடிவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. வீடியோ இறுதியில் செஸ் ஒலிம்பியாட் நாயகன் "தம்பி" அனைவருக்கும் நன்றி தெரிவித்து பிரியாவிடை கொடுத்தார்.

இந்தத் தொடரில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மீனியா வெள்ளியும், இந்தியா பி வெண்கலமும் வென்றது. மகளிர் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளியும், இந்திய மகளிர் ‘ஏ’ வெண்கலமும் வென்றது.

நிறைவு விழாவைப் பார்க்க...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x