Published : 02 Aug 2022 02:50 AM
Last Updated : 02 Aug 2022 02:50 AM

IND vs WI | இந்திய வீரர்களை சாய்த்த மெக்காய் - ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்திய தீவுகள்

செயின்ட் கிட்ஸ்: இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. இந்நிலையில், இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. தரூபா பகுதியில் பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் இரு அணிகளும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் டி20 போட்டியில் விளையாடின. இதில், 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

இன்று வார்னர் பார்க் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இந்தியாவுக்கு ரோகித்தும், சூர்யகுமார் யாதவ்வும் ஓப்பனிங் செய்தார்கள். ஆட்டத்தின் முதல் பந்தே இந்தியாவுக்கு அதிர்ச்சிக் கொடுத்தார் ஓபேட் மெக்காய். அவரின் முதல் பந்தில் கேப்டன் ரோகித் சர்மா டக் ஆகினார். இதேபோல் மெக்காய் தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் 11 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவையும் சாய்த்தார். குறிப்பாக, மெக்காய் தான் வீசிய நான்கு ஓவர்களில் விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தார்.

தனது மூன்றாவது ஓவரில் ரவீந்திர ஜடேஜாவை அவுட் ஆக்கியவர், நான்காவது ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக், அஸ்வின், புவனேஷ்வர் குமார் என மூன்று பேரை வெளியேறினார். அவரின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவை பொறுத்தவரை முன்னணி வீரர்களில் ஹர்திக் பாண்டியா 31 ரன்களும், ஜடேஜா ரன்களும், பந்த் 24 ரன்களும் அதிகபட்சமாக எடுத்தனர். மற்றவர்கள் சொதப்பினர். ஓபேட் மெக்காய், நான்கு ஓவர்களில் வீசி அதில் ஒரு மெய்டனுடன் மொத்தம் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பிராண்டன் கிங் சிறப்பான துவக்கம் கொடுத்தார். கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரான், ஷிம்ரோன் ஹெட்மேயர் போன்ற முன்னணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும், பிராண்டன் கிங் ஒற்றை ஆளாக 68 ரன்கள் சேர்த்தார். அவருக்கு பக்கபலமாக விக்கெட் கீப்பர் டேவான் தாமஸ் 31 ரன்கள் சேர்க்க மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. எனினும், இந்திய பவுலர்கள் விக்கெட்களை கைப்பற்றாவிடினும், ரன் விகிதத்தை கட்டுப்படுத்தி கடைசி ஓவர் வரை கொண்டுவந்தனர்.

கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட, அவேஷ் கான் பந்துவீசினார். அதுவரை இரண்டு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் உடன் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து நல்ல பந்துவீச்சை வெளிப்படுத்திய அவேஷ் கான் கடைசி ஓவரின் முதல் பந்தை யார்க்கராக வீசி ரன்கள் சேர்ப்பதை கட்டுப்படுத்தினர். ஆனால், அந்த பாலை நோ-பாலாக வீசியதால் ப்ரீ ஹிட் கொடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட டேவான் தாமஸ் அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியாக ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் தற்போது இரு அணிகளும் 1-1 தொடரில் சமநிலையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x