Published : 07 Jul 2022 06:30 AM
Last Updated : 07 Jul 2022 06:30 AM

இந்தியா – இங்கிலாந்து டி 20 போட்டியில் இன்று மோதல்

சவுத்தாம்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று இரவு 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறார். விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் 2-வது போட்டியையொட்டியே அணியுடன் இணைய உள்ளனர். ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளதால் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

அயர்லாந்துக்கு எதிராக சதம் அடித்த தீபக் ஹூடாவிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ள சூர்யகுமார் யாதவ், அயர்லாந்து தொடரில் கவனத்தை ஈர்க்கத் தவறினார். இதனால் அவர், சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் புவனேஷ்வர் குமார் சிறந்த பார்மில் உள்ளார். அவருடன் உம்ரன் மாலிக், ஹர்ஷால் படேல், அவேஷ் கான், யுவேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் வலுசேர்க்கக்கூடும். இங்கிலாந்து டி 20 தொடரானது இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கான சிறந்த இந்திய அணியை தேர்வு செய்வதற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்குகிறது. பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள போதிலும் இங்கிலாந்து அணி வலுவாக திகழ்கிறது. ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சவால் தரக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x