Published : 03 Jul 2022 10:32 PM
Last Updated : 03 Jul 2022 10:32 PM

புஜாரா போல விளையாடி வந்த பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜ் செய்து பந்த் போல மாற்றினார் கோலி - சேவாக்

புது டெல்லி: புஜாரா போல விளையாடி வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவை தேவையில்லாமல் ஸ்லெட்ஜ் செய்து ரிஷப பந்த் போல் அட்டாக்கிங் மோடுக்கு மாற்றினார் விராட் கோலி என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 132 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்த போது அந்த அணி வீரர் பேர்ஸ்டோவிடம் காரசாரமான வார்த்தை போரில் (ஸ்லெட்ஜிங்) ஈடுபட்டார் முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி. நியூசிலாந்து அணி வீரர் சவுதி பந்துவீச்சை ஒப்பிட்டு பேர்ஸ்டோவை வம்புக்கு இழுத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து அமைதியாக பேட் செய்யும் படியும் சொல்லி இருந்தார். அந்த தருணம் ஆட்டத்தில் அனல் பறந்தது. அப்போது 61 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 13 ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார் பேர்ஸ்டோ. அதன் பிறகு 79 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். இறுதியில் பேர்ஸ்டோவை கேட்ச் பிடித்து வெளியேற்றியது கோலி தான். இந்நிலையில், அதை தான் இப்போது விமர்சித்துள்ளார் சேவாக்.

"கோலி, பேர்ஸ்டோவை ஸ்லெட்ஜ் செய்வதற்கு முன்னர் அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 21 தான். ஆனால் அதன் பிறகு அவரது ஸ்ட்ரைக் ரேட் 150. புஜாரா போல விளையாடி வந்த பேர்ஸ்டோவை தேவையில்லாமல் ஸ்லெட்ஜ் செய்து ரிஷப பந்த் போல மாற்றினார் விராட் கோலி" என ட்வீட் செய்துள்ளார் சேவாக்.

இரண்டாவது இன்னிங்ஸில் 40 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார் கோலி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x