Published : 19 May 2022 12:02 AM
Last Updated : 19 May 2022 12:02 AM

IPL 2022 | கடைசி பந்தில் லக்னோ த்ரில் வெற்றி - 2 ரன்களில் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிய கொல்கத்தா

ஐபிஎல் 66வது ஆட்டத்தில் பரபரப்பான இறுதி ஓவரில் கடைசி பந்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து சிறப்பான துவக்கம் கொடுத்தது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரையும் கடைசி ஓவர் வரை பிடிக்க முடியவில்லை. குறிப்பாக இம்முறை குயின்டன் டி காக் களத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார். கொல்கத்தா பவுலிங்கை நாலாபுறமும் சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளாக விளாசினார்.

மொத்தம் 70 பந்துகளை சந்தித்த அவர், தலா 10 பவுண்டரிகள், சிக்ஸர்கள் விளாசி 140 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த கேஎல் ராகுல் 68 ரன்கள் எடுத்திருந்தார். இருவரின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி விக்கெட் இழப்பில்லாமல் 210 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் 210 ரன்கள் இலக்கை துரத்தியது. அதிரடி பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அறிமுக வீரர் அபிஜித் தோமர் அடுத்த ஓவரிலேயே தனது விக்கெட்டை பறிகொடுக்க, 10 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே இரண்டு விக்கெட்களை இழந்த அணியை மீட்டெடுத்தனர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா இருவரும். ராணா 42 ரன்களும், ஷ்ரேயாஸ் 50 ரன்களும் சேர்த்து அவுட் ஆக, அவர்களுக்கு பக்கபலமாக இருந்த சாம் பில்லிங்ஸ் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல் ஐந்து ரன்களுக்கு நடையைக் கட்டினார். இறுதிக்கட்டத்தில் 60 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட போது ரிங்கு சிங் அதிரடியாக ஆடி வெற்றிக்கு நெருக்கமாக கொண்டுச் சென்றார். இதனால் கடைசி ஓவர்களில் ஆட்டம் பரபரப்பை எட்டியது. இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் அடித்து அதிரடி காட்டியவர், 2 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது கேட்ச் ஆனார்.

கடைசி பந்தில் உமேஷ் யாதவ் விக்கெட்டை வீழ்த்தி லக்னோ அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த தோல்வி மூலம் கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. அதேநேரம், லக்னோ இரண்டாவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x