Last Updated : 29 May, 2016 09:37 AM

 

Published : 29 May 2016 09:37 AM
Last Updated : 29 May 2016 09:37 AM

ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று பெங்களூரு-ஐதராபாத் பலப்பரீட்சை: முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை இரவு 8 மணிக்கு சோனி இஎஸ்பின் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் இரு அணிகளும் இன்றைய போட்டியை எதிர்கொள்கின்றன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.20 கோடி பரிசுத்தொகை கிடைக்கும். தோல்வி அடையும் அணி ரூ.11 கோடியை பெறும்.

கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் தொடங்கிய 9-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

விராட் கோலி

சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் இன்று மல்லுக்கட்டுகின்றன. இரு அணிகளையும் இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த பெருமை அந்த அணியின் கேப்டன்களையே சேரும். பெங்களூரு அணி 2009 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தது.

3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள அந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. கேப்டன் கோலி இந்த தொடரில் உச்சக்கட்ட பார்மில் உள்ளார். இந்த தொடரில் அவர் 15 ஆட்டத்தில் 4 சதம், 6 அரை சதங்களுடன் 919 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங்கோடு மட்டுமல்லாமல் அணியை வழிநடத்தும் தலைமைப்பண்பிலும் கோலி சிறந்து விளங்குகிறார்.

மிரட்டும் டி வில்லியர்ஸ்

அவருக்கு உறுதுணையாக டி வில்லியர்ஸூம் அதிரடியில் மிரட்டி வருகிறார். இந்த தொடரில் ஒரு சதம், 6 அரை சதங்களுடன் 682 ரன்கள் சேர்த்து அதிக ரன்குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.

முதல் தகுதி சுற்று போட்டியில் 29 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த நிலையில் டி வில்லியர்ஸ் தனது அசாத்தியமான பேட்டிங்கால் அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்து இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேற உதவினார். தொடரின் கடைசி பகுதியில் ஒரு சில ஆட்டங்களில் அதிரடி காட்டிய கிறிஸ் கெயிலும் அச்சுறுத்தும் வீரராக உள்ளார்.

பதிலடி கொடுக்குமா?

இவர்களை தவிர கே.எல்.ராகுல், அப்துல்லா, வாட்சன் ஆகியோரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தக்கூடியவர்களே. பேட்டிங்கில் அசுர பலத்துடன் காணப்படும் பெங்களூரு அணியின் பந்து வீச்சு ஆரம்ப கட்ட ஆட்டங்களில் மோசமாக இருந்தது. இதனால் அதிக ரன்களை குவித்தும் தோல்வியை தவிர்க்க முடியாத நிலைமைக்கு அணி தள்ளப்பட்டது.

ஆனால் தொடரின் கடைசி பகுதியில் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் உத்வேகத்துடன் செயல்பட தொடங்கினர். சுழற்பந்து வீச்சாளர் யஜூவேந்திரா ஷாகல் இந்த தொடரில் 12 ஆட்டத்தில் 20 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தொடரின் பிற்பாதியில் அணியில் சேர்க்கப்பட்ட கிறிஸ் ஜோர்டான் சிறந்த பங்களிப்பை வழங்குகிறார்.

வாட்சன் தனது அனுபவத்தை பந்து வீச்சில் சரியாக பயன்படுத்தி வருகிறார். அவர் இந்த தொடரில் 15 ஆட்டத்தில் 20 விக்கெட் கைப்பற்றியுள்ளார். லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் பெங்களூரு அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஐதரபாத்திடம் தோல்வியடைந்திருந்தது. இந்த பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது பெங்களூரு அணி.

ஐதராபாத்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடந்த 2013-ல் தான் அறிமுகம் ஆனது. அந்த தொடரில் பிளே ஆப் சுற்று வரை முன்னேறியது. தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கிறது. ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னரின் பலத்தை அதிகம் சார்ந்துள்ளது.

லீக் சுற்றில் தொடர்ச்சியாக வெற்றியை குவித்த நிலையில் கடைசி பகுதியில் திடீர் சறுக்கலை சந்தித்தது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேற போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. வெளியேற்றும் சுற்றில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

வார்னர்

அடுத்து நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் வார்னர் தனிநபராக போராடி 93 ரன்கள் குவித்து அணியை இறுதி போட்டிக்கு தகுதி பெற செய்தார்.இந்த தொடரில் அவர் 16 ஆட்டத்தில் 8 அரை சதங்களுடன் 779 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் கோலிக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.

வார்னரை தவிர ஷிகர் தவண், யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, நமன் ஓஜா, பென் கட்டிங் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடியவர்களாக உள்ளனர்.

பந்து வீச்சு பலம்

பந்து வீச்சில் ஐதராபாத் அணி பலம் வாய்ந்ததாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் 15 ஆட்டத்தில் 23 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு உறுதுணையாக உள்ள முஸ்டாபிஸூர் ரஹ்மான் 16 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் களமிறங்காத அவர் இன்று களமிறங்கக்கூடும். இந்த இருவருடன் பரிந்தர் ஷரணும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்படக்கூடியவராக உள்ளார். முதல் முறையாக இறுதிப்போட்டியை சந்திக்கும் ஐதராபாத் அணி, பெங்களூரு அணியின் சொந்த மைதானத்தில் நெருக்கடியை சமாளித்து அசத்தும் பட்சத்தில் பட்டம் வெல்லும் கனவு நனவாகக் கூடும்.

நேரம்: இரவு 8

இடம்: பெங்களூரு

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x