Published : 19 Feb 2022 06:51 PM
Last Updated : 19 Feb 2022 06:51 PM

82-ல் 75 வாக்குகள்... ஒலிம்பிக் கனவில் புதிய சகாப்தம் - 40 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவில் ஐஓசி அமர்வு

மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அடுத்த அமர்வு அடுத்த ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கூட்டம் இந்தியாவில் நடக்கவிருப்பது இது இரண்டாவது முறை.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அல்லது ஐஓசி அமர்வு என்பது, அந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் வருடாந்திர கூட்டம் ஆகும். இந்தக் கமிட்டியே ஒலிம்பிக்கை நடத்தும் நகரங்களை தேர்வு செய்வது, ஒலிம்பிக் சாசனத்தை திருத்தம் செய்வது, பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட உலகளாவிய ஒலிம்பிக் இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளில் முடிவெடுக்கும் என்பதால், ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐஓசி அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் இந்த அமர்வில் கலந்துகொள்வார்கள். அதன்படி, இன்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் 139வது ஐஓசி அமர்வு நடந்தது. இந்த அமர்வில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ஐஓசி உறுப்பினராக உள்ள நீட்டா அம்பானி, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஐஓசியின் அடுத்த அமர்வை இந்தியாவின் மும்பையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு நடந்த வாக்கெடுப்பில் 82 வாக்குகளில் 75 வாக்குகள் மும்பையில் நடத்துவதற்கு ஆதரவாக வாக்களிக்க, அதன்படி, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வு மும்பையில் நடத்துவது உறுதியாகியது. 1983-க்குப் பிறகு முதல் முறையாக ஐஓசி அமர்வு இந்தியாவில் நடக்கவுள்ளது. மும்பையில் நடக்கவிருக்கும் அமர்வில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் உட்பட சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் ஒலிம்பிக் கனவில் இதுவொரு மிகப்பெரிய மைல்கல்லாகும். ஐஓசி அமர்வு 2023 மும்பையில் நடப்பது உறுதியாகியுள்ளது இந்திய விளையாட்டுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும். ஏனென்றால், உலகளாவிய விளையாட்டுகளில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இது சிறந்த வாய்ப்பு. விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல், உலகத்தரம் வாய்ந்த பயிற்சி உள்கட்டமைப்பு, மில்லியன் கணக்கானவர்களின் விளையாட்டு கனவை மெய்ப்படுத்த பல வாய்ப்புகள் கிடைக்கலாம். இதனாலேயே இந்தியாவின் விளையாட்டு நட்சத்திரங்கள் பலரும், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், தடகள வீராங்கனை ஹீமா தாஸ் எனப் பலர் இந்த பெருமைமிகு தருணத்தை கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய விளையாட்டுத்துறை சமீபத்திய ஆண்டுகளில் மாபெரும் முன்னேற்றம் கண்டுவருவதற்கு இதுவே சான்று என்றும், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கைக்கான முதல்படி இது என்றும் அவர்கள் நெகிழ்வுடன் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x