Published : 09 Feb 2022 09:54 PM
Last Updated : 09 Feb 2022 09:54 PM

IND vs WI 2nd ODI | பிரசித் கிருஷ்ணா அசத்தல்: மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

அகமதாபாத்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியையும் வென்று, தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. அசத்தலான பந்துவீச்சால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேஎல் ராகுலின் 49 ரன்கள் மற்றும் சூர்யகுமார் யாதவ்வின் 64 ரன்கள் உதவியுடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. குறைவான இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. சாய் ஹோப் மற்றும் பிராண்டன் கிங் இருவரும் துவக்கம் கொடுத்தனர். இருவரும், முதல் ஏழு ஓவர்களை வீசிய முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூரை எளிதாக சமாளித்து ஆடினார்.

அதன்பின் இளம்வீரர் பிரசித் கிருஷ்ணா தனது வேகத்தால் ஓப்பனிங் கூட்டணியை பிரித்தார். முதல் விக்கெட்டாக பிராண்டன் கிங் 18 ரன்களிலும், அடுத்து வந்த பிராவோவை 1 ரன்னிலும் பிரசித் அவுட் செய்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். 27 ரன்கள் எடுத்த நிலையில் சஹால் ஓவரில் சாய் ஹோப்பும் வெளியேற மேற்கிந்தியத் தீவுகள் அணி நிலைகுலைந்தது. இதன்பின் வந்த வீரர்களில் ஷமர் ப்ரூக்ஸ், அகேல் ஹுசைன் தவிர மற்ற அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். ஷமர் ப்ரூக்ஸ் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுக்க, அகேல் ஹுசைன் 34 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதியில் 46 ஓவர்கள் முடிவில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அந்த அணி. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2 - 0 என்று கைப்பற்றவும் செய்தது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்த கடந்த 11 ஒருநாள் தொடர்களையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டாஸ் வென்ற பூரான் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்ய, இந்திய அணி களம்கண்டது. சர்ப்ரைஸாக இன்று ரோஹித் உடன் ரிஷப் பந்த் ஓப்பனிங் செய்தார். இந்த மாற்றம் கைகொடுக்கவில்லை. கடந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காத கெமார் ரோச், இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை அவுட் ஆக்கினார். இதன்பின் கோலி உடன் இணைந்த ரிஷப் பந்த் பொறுமையாக ஆடினாலும், விரைவாகவே விக்கெட்டை பறிகொடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் பவுலர் ஓடென் ஸ்மித் வீசிய 12-வது ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பந்த்தும், கடைசி பந்தில் விராட் கோலியும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.

இதன்பின் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுலும், சூர்யகுமார் யாதவும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 49 ரன்களில் கேஎல் ராகுல் வெளியேற, சூர்யகுமார் யாதவ் தனது இரண்டாவது அரைசதத்தை கடந்தார். 64 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த இந்திய வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 238 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப் மற்றும் ஸ்மித் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

இந்திய அணி வீரர்களின் ஸ்கோர் விவரங்கள்: ரோஹித் - 5 ரன்கள்; ரிஷப் பந்த் - 18 ரன்கள்; விராட் கோலி - 18 ரன்கள்; கேஎல் ராகுல் - 49 ரன்கள்; சூர்யகுமார் யாதவ் - 64 ரன்கள்; வாஷிங்டன் சுந்தர் - 24 ரன்கள்; தீபக் ஹூடா - 29 ரன்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x