Published : 09 Feb 2022 04:53 PM
Last Updated : 09 Feb 2022 04:53 PM

”அனைத்து முன்னாள் வீரர்களுக்கும்...” - லாங்கர் ராஜினாமா விவகாரத்தில் மௌனம் கலைத்த கம்மின்ஸ்

மெல்போர்ன்: பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ராஜினாமா தொடர்பாக முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஜஸ்டின் உடன் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவிக் காலம் முடிவதற்கு ஐந்து மாதங்கள் இருக்கும் முன்பாகவே ராஜினாமா முடிவை எடுத்ததன் பின்னணியில் ஆஸ்திரேலிய வீரர்களுடனான மோதல் போக்கு காரணமாக சொல்லப்பட்டது. குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மீது லாங்கர் பதவி விலகல் குறித்து முன்னாள் வீரர்களால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், கம்மின்ஸை தைரியமற்றவர் என்று விமர்சித்தார்.

இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த விவகாரம் தொடர்பாக கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். தனது அறிக்கையில் கம்மின்ஸ், "ஜஸ்டினே தனது பயிற்சி பாணி தீவிரமானது என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக வீரர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். மன்னிப்பு தேவையற்றது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், பயிற்சியில் அவரின் தீவிரமான அணுகுமுறையால் வீரர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், அவரின் பயிற்சியின் நோக்கத்தையும் வீரர்கள் புரிந்துகொண்டனர். ஆஸ்திரேலியா மீதான ஜஸ்டனின் நேசம் மற்றும் விளையாட்டு மீதான காதல் புரிந்துகொள்ள முடிந்தது. மூன்று தசாப்தங்களாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு உழைத்துள்ளார் ஜஸ்டின். அதுவே அவரை விளையாட்டில் ஜாம்பவான் ஆக்கி இருக்கிறது என்று நம்புகிறேன்.

மேலும், அவரின் பயிற்சி அணுகுமுறை மற்றும் கலாச்சாரம் அணியின் தரத்தை உயர்த்தியதை மறுக்க முடியாது. இதற்காக வீரர்கள் சார்பில் ஜஸ்டினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கும் மேலாக, நாங்கள் அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறோம். எனவே, அவரின் அணுகுமுறை எங்களுக்கு பிரச்னை இல்லை. கிரிக்கெட் விளையாடுவது எப்படி என்பதை நாங்கள் நன்கு கற்றுக்கொண்டோம். சரியான முறையில், சரியான வழியில் எப்போதும் உயர்ந்த நெறிமுறை தரங்களுக்கு ஏற்ப விளையாடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

இப்போது வீரர்களின் வளர்ச்சிக்கும், அணியின் சிறந்த அடித்தளத்துக்கும் எங்களுக்கு புதிய திறமைகளுடன் பயிற்சி தேவை. எதிர்காலத்திற்கான சிறந்த பயிற்சி முறை எது என்பதை உணர்த்து ஒரு திறமை தேவைப்படுகிறது. இந்தக் கருத்தை தான் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் முன்வைத்தோம். எங்கள் கோரிக்கைகளை தாண்டி தொழில்முறை விளையாட்டு வீரர்கள் என்ற முறையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா என்ன முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொண்டிருப்போம். ஆனால், இதில் கிரிக்கெட் வாரியம் துணிச்சலான முடிவை எடுத்தது. எங்கள் முதல் கடமை ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு சேவை செய்வது மட்டுமே. இது எங்கள் எல்லாரையும் விட பெரியது.

கேப்டன் பொறுப்பை நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். அதற்காக உழைக்கிறேன். பல முன்னாள் வீரர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அமைதியாக தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். மேலும், சிலர் ஊடகங்களில் பேசினர். இவை அனைத்தும் வரவேற்கத்தக்கது. விளையாட்டின் மீதான காதல் காரணமாக, இந்தக் கருத்துக்கள் வெளிப்படுகிறது என்று நம்புகிறேன். சிலரின் கருத்துகளுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா மூலம் நான் சில தெளிவை வழங்க கடமைப்பட்டுள்ளேன். அனைத்து முன்னாள் வீரர்களுக்கும்... இந்த அறிக்கை வாயிலாக நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் எப்படி உங்கள் சக வீரருக்காக போராடுவது போல், நானும் போராடுகிறேன்" என்று விரிவாக பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x