Published : 02 Nov 2021 02:17 PM
Last Updated : 02 Nov 2021 02:17 PM

இந்திய அணிக்குள் பிளவு; கோலிக்கு எதிராக ஒரு அணி: பீதியை கிளப்பும் ஷோயப் அக்தர்


இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. கோலிக்கு எதிராக ஓர் பிரிவினரும், கோலிக்கு ஆதரவாக ஓர் பிரிவினரும் செயல்படுகிறார்கள் எனத்தகவல் கிைடத்துள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்திய அணியைப் பற்றிய புதுத்புது தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன.

இந்திய அணி நிர்வாகம் எடுத்த முடிவுகள், கோலியின் கேப்டன்ஷி, தோல்விகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், சர்வதேச அளவில் பல வீரர்களும் விமர்சனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகபோட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தபின் வேகப்பந்துவீச்சாளர் ஷமிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முகமது ஷமி குறித்தும், அவரின் குடும்பத்தார், மதம் குறித்தும் அவதூறான கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சமீபத்தில்பேட்டி அளித்த கேப்டன் கோலி, “ஷமியை மதரீதியாக விமர்சித்தவர்கள், தாக்கியவர்கள் விரும்பினால் இன்னும் வேண்டுமானால் அதிகபலத்துடன்வரட்டும். எங்கள் அணியில் உள்ள சகோதரத்துவம், நட்பு, எதையும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. இந்திய அணியின் கேப்டனாக உறுதி கூறுகிறேன், அணிக்குள் நாங்கள் உருவாக்கியுள்ள கலாச்சாரத்தை இதுபோன்ற விஷயங்கள் .0001 சதவீதம் கூட ஊடுருவமுடியாது. இதற்கு முழுமையாக உத்தரவாதம் அளிக்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் அதிர்ச்சிதரும் தகவலை தெரிவித்துள்ளார். ஷோயப் அக்தர் பேசியதாவது:

இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்திய அணிக்குள் இரு பிரிவுகள் செயல்படுகின்றன. ஒன்று பிரிவு வீரர்கள் கோலிக்கு ஆதரவாகவும், ஒரு பிரிவு வீரர்கள் கோலிக்கு எதிராகவும் செயல்படுகிறார்கள் என நினைக்கிறேன். இது தெளிவாகத் தெரிகிறது.

எதற்காக இந்த பிளவு ஏற்பட்டது என எனக்குத் தெரியாது. ஒருவேளை டி20 அணிக்கு கோலி கடைசியாக கேப்டன் பதவி ஏற்பதால் கூட இந்தப் பிளவு இருக்கக்கூடும். அல்லது கடந்த 2 போட்டிகளில் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டார் என்பதால் இருக்கலாம். எது உண்மை எனத் தெரியவில்லை. கோலி மிகச்சிறந்த வீரர் ஒவ்வொருவரும் அவரை மதிக்கிறோம்.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தவுடனே வீரர்கள் அனைவரும் மனரீதியாக நம்பிக்கையிழந்துவிட்டார்கள். தோல்வி அடைந்தபின் விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

விமர்சனங்கள் முக்கியமானது.ஏனென்றால் நியூஸிலாந்துக்கு எதிராக மோசமான கிரிக்கெட்டை இந்திய அணியினர் விளையாடியுள்ளார்கள், தவறான மனநிலையுடன் இருந்துள்ளார்கள். இந்தத் தோல்விக்குப்பின் ஒவ்வொருவரின் தலையும் கவிழ்ந்தது. என்ன செய்ய வேண்டும் என்பது யாருக்கும் தெரியவி்ல்லை.

டாஸில் தோல்வி அடைந்தபோது, இந்திய அணி போட்டியில் தோல்வி அடையவில்லை என்பதை நினைக்க மறந்துவிட்டார்கள். இதை மனதில் வைத்து நம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், எந்தவிதமான திட்டமிடலும் இந்திய அணியிடம் இல்லை
இவ்வாறு அக்தர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x