Published : 01 Nov 2021 12:38 PM
Last Updated : 01 Nov 2021 12:38 PM

பயத்தால் ஏற்பட்ட தோல்வியா? ஒரு போட்டியில் வீரர்களை எப்படி மாற்றலாம்?- இந்திய அணியைக் கேள்வியால் துளைக்கும் முன்னாள் வீரர்கள்

படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி 

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி பயத்தால் தோல்வி அடைந்ததா, ஒரு போட்டியில் அடைந்த தோல்விக்காக அணியை மாற்றலாமா என்று இந்திய அணியின் தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர்-12 சுற்றின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூஸிலாந்து அணி.

இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதேசமயம், இந்திய அணியை பேக்கிங் செய்துவிட்டது வில்லியம்ஸன் படை. இந்திய அணிக்கு அடுத்து 3 போட்டிகள் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிட்டது. ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறிவிட்டது.

இந்திய அணிக்குக் கிடைத்த அதிர்ச்சி தோல்வி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் ட்விட்டரில் பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் வைத்துள்ளனர்.

வீரேந்திர சேவாக்:

இந்திய அணியிடம் இப்படி ஒரு விளையாட்டு வேதனையாக இருக்கிறது. நியூஸிலாந்து ஆட்டம் அற்புதம். இந்திய வீரர்களின் உடல் மொழி சிறப்பாக இல்லை, மோசமான ஷாட்கள் தேர்வு செய்தனர். எந்தவிதமான மாற்றமும் இன்றி அடுத்த கட்டத்துக்கு நியூஸிலாந்து சென்றுவிட்டது. இந்தத் தோல்வி இந்திய அணியை பாதித்துள்ளது. தீவிரமான சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இர்ஃபான் பதான்

டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் பிளேயிங் லெவனை ஒரு போட்டி தோல்வியை வைத்து மாற்றக்கூடாது. வீரர்களுக்கு நிலைத்தன்மை தேவை. சிலர் முக்கிய வீரர்கள் மாற்றப்பட்டது குறித்து எனக்கு வியப்பாக இருந்தது. நியூஸிலாந்து சிறப்பாக விளையாடியது. இந்திய அணியைப் பொறுத்தவரை, ஒன்றாகச் சேர்ந்து அதிசயங்களை நிகழ்த்துவது அவசியம். காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.

விவிஎஸ் லட்சுமண்

இந்தத் தோல்வி நிச்சயம் இந்திய அணியை பாதிக்கும். பேட்டிங், ஷாட் தேர்வு போன்றவை கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. நியூஸிலாந்து அணி சிறப்பாகப் பந்து வீசியது. ஆனால், இந்திய இலக்கை எளிதாக வைத்துவிட்டது. நியூஸிலாந்து நெட் ரன் ரேட்டும் உயர்ந்துவிட்டது. அரையிறுதி வாய்ப்பு அருகிவிட்டது.

சுனில் கவாஸ்கர்

பயத்தால் இந்திய அணி தோற்றுவிட்டதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், பேட்டிங் வரிசையில் இன்று செய்த மாற்றம் எந்தப் பலனும் அளிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன், அவரை 3-வது வீரராகக் களமிறக்கினீர்கள். நம்பர் 3 இடத்தில் கோலி ஏராளமான ரன்களை அடித்துள்ளார். அவரை 4-வது வீரராகக் களமிறக்கினீர்கள். இஷான் போன்ற இளம் வீரருக்குப் பொறுப்பு கொடுத்து தொடக்க வீரராகக் களமிறக்கினார்கள். இஷான் கிஷன் பின்ச் ஹிட்டர் அவரை 4-வது அல்லது 5-வது வீரராகக் களமிறக்கியிருக்கலாம்.

மதன் லால்

வழக்கமாகக் காணப்படுவதைவிட, இந்த இரு போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பொறுமையின்றிக் காணப்பட்டது துரதிர்ஷ்டம். ரன்கள் அடிக்காவிட்டால் நீங்கள் போட்டிக்கு வந்திருக்க வேண்டாம். ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால்தான், 111 இலக்கை நீங்கள் டிபென்ட் செய்ய முடியும். இரு போட்டிகளிலும் இந்திய அணி தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்த டி20 போட்டித் தொடரில் விரைவாக முன்னெடுப்பு எடுக்காவிட்டால், கடினமாக அமைந்துவிடும்.

ஹர்பஜன் சிங்

நமது இந்திய வீரர்களிடம் கடுமையாக நடக்க வேண்டாம். சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என நமக்குத் தெரியும். ஆனாலும் இதுபோன்ற முடிவு வந்துவிட்டது. நியூஸிலாந்து வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அனைத்துத் துறைகளிலும் அபாரமாகச் செயல்பட்டனர்.

இவ்வாறு முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x