Published : 20 Dec 2015 01:05 PM
Last Updated : 20 Dec 2015 01:05 PM
கோவை நேரு விளையாட்டு அரங் கில், பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் மாநில அளவிலான 58-வது குடியரசு தின தடகளப் போட்டிகளில் இரண்டு புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
இப்போட்டியில் 16 மண்டலங்களில் இருந்து 2,327 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இரண்டாம் நாள் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஈட்டி எறிதலில் கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.ஸ்ரீநாத் 52.35 மீட்டர் தூரம் வீசி புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அதிகபட்சமாக 51.12 மீட்டர் தூரம் வீசியதே சாதனையாக இருந்தது.
17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், மதுரை விளையாட்டுப் பள்ளி விடுதி மாணவர் ஆர்.நவீன் 48.04 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார். முந்தைய சாதனை 48.19 விநாடிகள் ஆகும்.
முன்னாள் காவல்துறைத் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவருமான டபிள்யு.ஐ.தேவாரம் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இன்றுடன் இந்த போட்டிகள் நிறைவடைகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT