Last Updated : 08 Apr, 2021 03:12 AM

 

Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: சாஸ்திரி செய்த சமாதானம்

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்று தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரு துருவங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். அதேபோல் இந்திய கிரிக்கெட்டிலும் கபில்தேவ் – கவாஸ்கர், தோனி – யுவராஜ் சிங், விராட் கோலி – ரோஹித் சர்மா என்று எல்லா காலகட்டத்திலும் இரு துருவங்கள் உள்ளன.

இதில் கடந்த சில காலமாக கோலி – ரோஹித் சர்மா இடையே தனிப்பட்ட முறையில் மோதல் இருந்ததைப்போல சித்தரிக்கப்பட்டு வந்தன. அவர்களின் சில நடவடிக்கைகளும் இதை உறுதிப் படுத்துவதாய் இருந்தன. குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முதலில் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்படவில்லை. காயம் காரணமாக அவரை தேர்வு செய்யவில்லை என்று தேர்வாளர்கள் கூறிய நிலையில், ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா ஆடியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கோலியிடம் செய்தியாளர்கள் கேட்க, ரோஹித் சர்மாவின் காயம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தனக்கு தெரியாது என்றார். தனது அணியில் ஆடும் வீரருக்கு என்ன நடந்தது என்றுகூட கேப்டனுக்கு தெரியாதா என்ற விமர்சனம் எழுந்தது.

அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் வீரர்களை வைத்து ரோஹித் சர்மா அணிக்குள் அரசியல் செய்வதாக அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்தொடரில் போட்டிகளின்போது ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.

இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருவரின் இந்த மாற்றத்துக்கு காரணம் ரவி சாஸ்திரிதான் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து தொடருக்கு முன்பிருந்த ‘பயோ பபிள்’ காலத்தில் இருவரையும் அழைத்து சாஸ்திரி சமாதானம் செய்ததாகவும், அதன் பிறகே இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x