Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM
உலகின் முதலாவது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற நாள் மார்ச் 28, 1891.
பண்டைய காலத்திலேயே கிரேக்க நாட்டில் உள்ள ஆண்கள், கனமான கற்களைத் தூக்கி தங்கள் பலத்தைக் காட்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பளுதூக்கும் போட்டிகள் தற்போதைய வடிவத்தைப் பெற்றது 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில்தான். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அர்தர் சாக்சன், ரஷ்யாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஹாக்கன்ஸ்மித், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் அபோலன் போன்றவர்கள் 19-ம் நூற்றாண்டில் தங்கள் நாடுகளில் நடைபெற்ற சர்க்கஸ் போட்டிகளில் கனமான பொருட்களைத் தூக்கி தங்கள் உடல் வலிமையை நிரூபித்து மக்களைக் கவர்ந்தனர். இவ்வாறாக பலர் உருவெடுக்கத் தொடங்கிய நேரத்தில் 1891-ம்ஆண்டில் லண்டன் நகரில் முதலாவது பளுதூக்கும் போட்டி நடத்தப்பட்டது.
6 நாடுகளைச் சேர்ந்த 7 பயில்வான்கள் பங்கேற்ற இப்போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட் லாரன்ஸ் லெவி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 1894-ம் ஆண்டுவரை நடைபெற்ற பல்வேறு பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்ற எட்வர்ட் லாரன்ஸ் லெவி 14 உலக சாதனைகளைப் படைத்தார்.
1896-ம் ஆண்டு நடந்த முதலாவது ஒலிம்பிக் போட்டியில், பளுதூக்கும் போட்டியும் சேர்க்கப்பட்டது. இந்த போட்டியில் எட்வர்ட் லாரன்ஸ் லெவி பங்கேற்கவில்லை. மாறாக இதன் நடுவர் குழுவின் உறுப்பினராக இருந்தார். ஆரம்பக் கட்டத்தில் பளுதூக்கும் போட்டிகளுக்கென முறையாக விதிகள் ஏதும் வகுக்கப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அறிவுரைப்படி 1928-ம் ஆண்டில் சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு பளுதூக்கும் போட்டிகளுக்கென்று புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. சர்வதேச அளவில் முக்கிய விளையாட்டுகளில் ஒன்றாக பளுதூக்கும் போட்டியும் உருவெடுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT