Published : 18 Mar 2021 03:13 AM
Last Updated : 18 Mar 2021 03:13 AM
2007-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேறின. இந்திய ரசிகர்கள் இதனால் வருத்தப்பட்டாலும் வருந்தத்தக்க சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் அந்நாட்டு பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம்.
ஒரு கிரிக்கெட் வீரராக பெரிய அளவில் சாதிக்காத பால் உல்மர், 1990-களில் தென் ஆப்பிரிக்க அணியைக் கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார் பாப் உல்மர். இவரது பயிற்சியின்கீழ் பாகிஸ்தான் அணி, 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் வெகுவாக நம்பினர். ஆனால் அதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேற, அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தச் சூழலில் மார்ச் 18-ம் தேதி ஜமைக்காவில் உள்ள தனது ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் பாப் உல்மர். அவரது மரணம் கிரிக்கெட் உலகையே உலுக்கியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரைக் கொன்றிருக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்த விசாரணை அதிகாரி, பின்னர் இது இயற்கையான மரணமாக இருக்கலாம் என்றார். பாப் உல்மரின் உடலில் காயம் ஏதும் இல்லாததால், தான் இப்படி கருதுவதாக தெரிவித்தார். ஆண்டுகள் பல கடந்தபோதிலும் உல்மரின் மரணம் தொடர்பான சந்தேகம் இன்னும் நீடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT