Published : 11 Nov 2015 07:28 PM
Last Updated : 11 Nov 2015 07:28 PM
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை இந்தியாவில் நடத்தலாம் என்று பிசிசிஐ விருப்பம் தெரிவித்ததாக எழுந்த ஊடகச் செய்திகளை அடுத்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரீடி சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை ஐக்கிய அரபு அமீரகத்திலோ அல்லது பாகிஸ்தானிலோ விளையாடும் சாத்தியமில்லை என்று பிசிசிஐ நேற்று தெளிவாகக் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் விளையாடினால் 50-50 வருவாய் பகிர்வுக்கான உத்தரவாதம் இருந்தால் விளையாடலாம் என்று அப்ரீடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜியோ சூப்பர் சானலில் அவர் கூறியதாவது:
இந்தியாவுக்குச் சென்று நம் அணி விளையாடலாம். ஆனால் இந்த விவகாரத்தில் பிசிசிஐ-யிடமிருந்து அனைத்துக்குமான உத்தரவாதங்களை எழுத்துபூர்வமாக பெற வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கானின் கூற்றை முற்றிலும் நான் ஆதரிக்கிறேன்.
கடைசியாக இந்தியாவுக்கு 2012-13-ல் சென்று விளையாடினோம். ஆனால் அப்போது கோடிக்கணக்கான வருவாயை பிசிசிஐ ஈட்டியது, நமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
எனவே இம்முறை வருவாயை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு அளிக்கும் என்று பிசிசிஐ எழுத்துபூர்வமாக உறுதி அளித்தால் இந்தியாவுக்கு சென்று விளையாடுவதில் ஆட்சேபணை இல்லை.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது மிக முக்கியம். டிசம்பரில் தொடரை நடத்துவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டது, ஆனால் பிசிசிஐ-தான் தாமதப்படுத்தி வருகிறது.
இவ்வாறு கூறினார் அப்ரீடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT