Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப காலகட்டங்களில் ஹாக்கி விளையாட்டு மட்டுமே இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தச் சூழலில், தனிநபர் பிரிவிலும் இந்தியாவால் பதக்கங்களை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர் கே.டி.ஜாதவ் என்று அழைக்கப்படும் கஷாபா தாதாசாஹேப் ஜாதவ். 1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்தத்தில் இவர் வென்ற வெண்கலப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கம்.
ஹெல்சிங்கியில் நடந்த இந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்பது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. இவர் பங்கேற்பதாக இருந்த ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டிக்கு முதலில் நிரஞ்சன் தாஸ் என்பவர்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதைக் கேள்விப்பட்டதும் பதறிப் போனார் ஜாதவ். உடனடியாக விளையாட்டுத் துறையில் செல்வாக்கு கொண்ட, பாட்டியாலா மகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜாதவைப் பற்றி நன்கு தெரிந்தவரான பாட்டியாலா மகாராஜாவும் அவருக்கு உதவ முன்வந்தார். நிரஞ்சன் தாஸுக்கும், ஜாதவுக்கும் இடையில் போட்டி நடத்தி அதில் வெல்பவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார். இதன்படி நடந்த போட்டியில் நிரஞ்சன் தாஸை வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் ஜாதவ்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும், இதில் பங்கேற்கச் செல்ல போதிய நிதி இல்லாமல் ஜாதவ் தவித்தார். இந்த சமயத்தில் அவர் படித்த, ராஜாராம் கல்லூரியின் முதல்வர் ஜாதவுக்கு உதவினார்.
தன் வீட்டை அடகுவைத்து ரூ.7,000 வழங்கினார். மேலும் சில நண்பர்களும் உதவ, ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார் ஜாதவ். தன்னை கஷ்டப்பட்டு ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பிய நண்பர்கள் பெருமைப்படும் விதத்தில் இப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT