Last Updated : 01 Nov, 2020 03:37 PM

 

Published : 01 Nov 2020 03:37 PM
Last Updated : 01 Nov 2020 03:37 PM

விறுவிறுப்படையும் ஐபிஎல்: ப்ளே ஆஃப் சுற்றுக்குள் ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் செல்ல முடியுமா? என்ன சொல்கிறது கணக்கீடு?


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13-வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக அமர்ந்துவிட்ட நிலையில் சிஎஸ்கே அணி வெளியேறிவிட்டது.

ப்ளே ஆஃப்பில் மீதமுள்ள 3 இடங்களைப் பிடிக்க 6 அணிகள் கடும் கோதாவில் இறங்கியுள்ளன. இந்த முன் நடந்த எந்த ஐபிஎல் தொடரிலும் இதுபோல் கடைசி லீக் வரை யார் ப்ளே ஆஃப் செல்வார்கள் என்பதை கண்டறியமுடியாத சூழல் வந்ததில்லை

இந்த முறை போட்டி கடுமையாக மாறியுள்ளது. முதல் பாதியில் வெற்றிப்படியில் ஏறிய அணிகள் 2-வது பாதியில் சறுக்கினர், முதல் பாதியில் சறுக்கிய அணிகள், 2-வது பாதியில் விறுவிறுவென மேலே ஏறி வருகின்றனர். பரமபதம் போன்று எந்தபோட்டியில் யார் தோற்பார்கள் என கண்டறிய முடியாத நிலை இருக்கிறது.

இதில் இன்று பிற்பகலில் நடக்கும் பஞ்சாப் , சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி சாதாரண வெற்றி பெற்றாலே 3-வது இடத்துக்கு ரன்ரேட் அடிப்படையில் நகர்ந்துவிட முடியும். ஆனால், 4-வது இடத்துக்கு ராஜஸ்தான், சன்ரைசர்ஸ், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

இதில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் -0.377 எனும் வீதத்தில் இருக்கிறது. இன்று இரவு கொல்கத்தா அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையே கடைசி லீக் ஆட்டம் என்பதால் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டுவார்கள்.

ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வர நிகர ரன்ரேட் சிறப்பாக இருக்க வேண்டும். அதாவது. கொல்கத்தா அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவேண்டும், அல்லது 13 ஓவர்களில் சேஸிங் செய்ய வேண்டும்.

இன்னும் ஒருவழி இருக்கிறது. அதாவது இன்று நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் பஞ்சாப் அணி தோற்க வேண்டும், மும்பை அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணியும் தோற்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால், ராஜஸ்தான் அணி ரன்ரேட் பற்றி கவலைப்படாமல் வென்றாலே போதுமானது.

இதில் சன்ரைசர்ஸ் அல்லது பஞ்சாப் அணிகளில் யாராவது ஒரு அணி வென்றாலும், ராஜஸ்தான் அணி தனது நிகர ரன்ரேட்டில் அடிவாங்கும். ஆதலால், டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபிஅணிகளுக்கு இடையிலான நாளை நடக்கும் ஆட்டத்தில் எந்த அணி தோற்கிறதோ அந்த அணியின் ரன்ரேட்டைவிட குறைவாக இருக்காமல் ராஜஸ்தான் அணி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை ஆர்சிபி அணி ஒரு ரன்னில் டெல்லியிடம் தோற்றாலே, ராஜஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வெல்ல வேண்டிய நிலை ஏற்படும். டெல்லி அணி ஒரு ரன்னில் ஆர்சிபியிடம் தோற்றால், ராஜஸ்தான் அணி 55 ரன்னில் கொல்க்ததா வென்றிருக்க வேண்டும்.

ஆகவே, கொல்கத்தாவை 65 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெல்வதும், அல்லது சேஸிங் செய்வதாக இருந்தால் 13 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடிப்பதும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கலாம்.

ஒருவேளை சன்ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் இரு அணிகளும் வென்றால், பஞ்சாப் அணியின் ரன்ரேட்டைவிட அதிகமாக ராஜஸ்தான் அணி பெற வேண்டும். அதற்கு கொல்கத்தா அணியை அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.

கொல்கத்தா அணி இதுவரை 13 ஆட்டங்களில் 6 வெற்றி, 7 தோல்வி என 12 புள்ளிகளுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட் -0.468 என மோசமாக இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று இரவு கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மோதுகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு என்ன விதிமுறைகள் இருக்கிறதோ அதேபோன்றுதான் கொல்கத்தா அணியும் வெல்ல வேண்டும். ஆனால், நிகர ரன் ரேட் மிகவும் மோசமாக இருக்கிறது. இருப்பினும், சன்ரைச்ஸ், பஞ்சாப் அணிகள் தோல்வி அடைந்தால், கொல்கத்தாவுக்கு 4-வது அணியாக தேர்வாக வாய்ப்பு உள்ளது. அதற்கு ராஜஸ்தான் அணியை கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

ஒருவேளை பஞ்சாப் அல்லது சன்ரைசர்ஸ் அணிகள் தங்களின் கடைசி ஆட்டத்தில் வென்றால், கொல்கத்தா அணி இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

நாளை நடக்கும் ஆர்சிபி, டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தோற்கும் அணியின் ரன்ரேட்டை விட கொல்கத்தா அணியின் ரன்ரேட் அதிகமாக இருக்கவேண்டும். எப்படி வைத்து கணக்கிட்டாலும், ராஜஸ்தான் அணியை குறைந்தபட்சம் 75 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெல்வது அவசியம். இல்லாவிட்டால், பஞ்சாப், சன்ரைசர்ஸ் அணிகள் தோற்க வேண்டும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x