Last Updated : 01 Nov, 2020 12:13 PM

 

Published : 01 Nov 2020 12:13 PM
Last Updated : 01 Nov 2020 12:13 PM

'நாங்கள் துணிச்சலாக பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்': தோல்விக்குப்பின் விராட் கோலி பேட்டி

ஆர்சிபி கேப்டன் விராட் கோலி : கோப்புப்படம்

ஷார்ஜா


சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக துணிச்சலாக போதுமான அளவு பேட்டிங் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சேர்த்தது.

121 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஆர்சிபி அணி 14 புள்ளிகளுடன் தற்போது 2-வது இடத்தில் இருந்தாலும், நிகர ரன்ரேட் அடிப்படையில் மிகக் குறைவாக இருக்கிறது. தொடர்ந்து 3-வது தோல்வியை ஆர்சிபி அணி சந்தித்துள்ளது

டெல்லி அணிக்கு எதிராக நாளை நடக்கும் போட்டி மிக முக்கியமானதாகும். இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும், தோற்கும் அணி வெளியேறும்.

பேட்டிங்கிற்கு சாதகமான ஷார்ஜா மைதானத்தில் ஆர்சிபி அணி மிகக்குறைவாக ஸ்கோர் செய்தது தோல்விக்கான காரணங்களில் பிரதானம். இன்னும் கூடுதலாக 40 முதல் 50 ரன்கள் சேர்த்திருந்தால், போட்டியை நெருக்கடியாக கொண்டு சென்றிருக்க முடியும்.

ஆர்சிபி அணியில் பிலிப் (32), டிவில்லியர்ஸ் (24) ஆகிய இரு வீரர்களைத் தவிர வேறு எந்த வீரரும் குறிப்பிடத்தகுந்த ரன்கள் சேர்க்கவில்லை. ஒட்டுமொத்தத்தில் இது பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஏற்பட்ட தோல்வி.

இந்த தோல்விக்குப்பின் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:
உண்மையில் நாங்கள் சேர்த்த ஸ்கோர் போதுமானது இல்லை. பேட்டிங்கில் நாங்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக துணிச்சலாகச் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஷார்ஜா போன்ற மைதானத்தில் இன்னும் கூடுதலாக 40 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். இந்த போட்டியின் வெற்றிக்கு சன்ரைசர்ஸ் அணிதான் உரியவர்கள்.

இதுபோன்ற கடுமையாக போட்டி நிறைந்த தொடரில், நாம் எதிர்கொள்ளும் சூழலில், எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது, எளிதாக எடுக்க முடியாது. அடுத்துவரும் கடைசிப் போட்டியில் வென்று தொடரில் 2-வது இடத்தை பிடிப்போம் என நம்புகிறேன்.

திங்கள்கிழமை அபு தாபியில் நடக்கும் ம் எங்களுக்கும், டெல்லி அணிக்கும் இடையிலான மிகவும் ஸ்வாரஸ்யம் மிகுந்ததாக அமையும். ஐபிஎல் தொடரில் எப்போதும் பெங்களூரு பையனாகவே இருக்க விரும்புகிறேன், டெல்லியை நோக்கி நகர்ந்ததில்லை.

இந்தப் போட்டியில் தோல்வியில் பனிப்பொழிவு முக்கியப் பங்கு வகித்தது. 2-வது இன்னிங்ஸில் பந்துவீச்சில் பனி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிகமான பனிப்பொழிவால், ஆடுகளத்தைக் கணித்து பந்தை பிட்ச் செய்யவும் முடியவில்லை. ஆனால், டாஸில் வென்றவுடன் வார்னர் அதை கணித்துவிட்டார். 2வது இன்னிங்ஸில் எங்களால் பந்தைப் பிடித்து பந்துவீச முடியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது.

துபாயில் முதலில் காலநிலை நன்றாக இருந்தது, எந்தவிதமான பனிப்பொழிவும் இல்லை. ஆனால், கடந்த சில போட்டிகளாக துபாயில் பனிப்பொழிவு ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறது. ஆதலால், முதலில் பேட்டிங் செய்யும் அணி நல்ல ஸ்கோர் செய்வது அவசியம்

இவ்வாறு கோலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x