Last Updated : 01 Nov, 2020 03:12 AM

 

Published : 01 Nov 2020 03:12 AM
Last Updated : 01 Nov 2020 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: விளையாட்டால் கிடைத்த வீராங்கனை

கேரளாவின் பையோளி கிராமத்தில் உள்ள பள்ளியின் பி.டி. ஆசிரியரான பாலகிருஷ்ணன், ஒருநாள் மைதானத்தில் உலவிக்கொண்டு இருந்தார். தூரத்தில் 4-ம் வகுப்பு மாணவிகள் சிலர் ஓடிப்பிடித்து விளையாடுவதை எதேச்சையாக அவர் பார்த்துள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர், மற்றவர்களுக்கு போக்குக்காட்டி வேகமாக ஓடுவதைக் கண்டதும் அவரது கண்கள் மலர்ந்துள்ளன. மாணவியின் ஒல்லியான உடல்வாகும், ஓட்டத் திறமையும், கண்டிப்பாக அவரை ஒருநாள் உச்சத்துக்கு கொண்டுபோகும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்த நாள் பள்ளியில் ஏற்கெனவே ஓட்ட வீராங்கனையாக திகழும் 7-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் அந்த சிறுமிக்கு ஓட்டப்பந்தயம் வைத்துள்ளார். ஆசிரியரின் கணிப்பு வீண்போகவில்லை. பந்தயத்தில் 7-ம் வகுப்பு மாணவியை 4-ம் வகுப்பு மாணவி வீழ்த்தியுள்ளார். அந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர், அவரது பெற்றோரை சந்தித்து, மாணவிக்கு தான் பயிற்சி அளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். ஆரம் பத்தில் இதற்கு சம்மதிக்காத பெற்றோர், பின்னர் விளையாட்டின் மூலம் எதிர்காலத்தில் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று ஆசிரியர் கூறியதால், அதற்கு சம்மதித்துள்ளனர். அப்படி பயிற்சியை தொடங்கிய மாணவிதான் இந்தியாவுக்கு 1986-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 4 தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த தங்க மங்கை பி.டி.உஷா.

1976-ம் ஆண்டில் கண்ணூரில் நடந்த ஆசிய பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிதான், அவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இப்போட்டியில் பி.டி.உஷாவின் ஆற்றலைக் கண்ட பிரபல பயிற்சியாளரான ஓ.எம்.நம்பியார், தனது பிரதம சிஷ்யையாக பி.டி.உஷாவை தத்தெடுத்துள்ளார். பி.டி.உஷாவின் ஆற்றலும், நம்பியாரின் பயிற்சியும் சேர்ந்து சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு பல பதக்கங்களை அள்ளிக் கொடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x