Published : 03 Oct 2015 03:51 PM
Last Updated : 03 Oct 2015 03:51 PM

11 விக்கெட்டுகள் 91 ரன்கள்: ரஞ்சியில் வீறு கொண்டு எழுந்த ரவீந்திர ஜடேஜா

ராஜ்கோட்டில் நடைபெற்ற ரஞ்சி டிராபி பிரிவு-சி போட்டியில் சவுராஷ்டிரா அணியை வெற்றி பெறச் செய்துள்ளார் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா.

திரிபுரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 118 ரன்களில் சவுராஷ்டிரா அணி வீழ்த்தியதில் பேட்டிங்கில் மிக முக்கியமான 91 ரன்கள் பங்களிப்பை ஜடேஜா செய்ததால் அந்த அணி 94/4 என்ற நிலையிலிருந்து முதல் இன்னிங்ஸில் 307 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி தன் முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்குச் சுருண்டது. காரணம் ரவீந்திர ஜடேஜா தனது இடது கை சுழற்பந்து வீச்சின் மூலம் 27.1 ஓவர்களில் 13 மெய்டன்களுடன் வெறும் 27 ரன்களையே கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே.

இதனையடுத்து சவுரஷ்டிரா கேப்டன் ஜே.என்.ஷா, திரிபுரா அணிக்கு பாலோ ஆன் கொடுக்க அந்த அணி நேற்று 11/3 என்ற நிலையிலிருந்து இன்று 86 ரன்களுக்குச் சுருண்டது, இதில் ஜடேஜா மீண்டும் அபாரமாக வீசி 25 ஓவர்களில் 11 மெய்டன்களுடன் 45 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மொத்தம் 11 விக்கெட்டுகளை இந்த போட்டியில் அவர் கைப்பற்றி சவுராஷ்டிர அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் சவுராஷ்டிர அணிக்கு வெற்றி புள்ளிகள் 7 கிடைத்துள்ளது.

ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x