Published : 04 Oct 2020 11:19 AM
Last Updated : 04 Oct 2020 11:19 AM

ஷ்ரேயஸ் அய்யருக்கு தோல்வி கிலி ஏற்படுத்திய மோர்கன், திரிபாதி கூட்டணி: ரபாடாவை ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த மோர்கன்

ஐபிஎல் 2020 தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 2வது ஆட்டத்தில் இந்த ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரான 229 ரன்களை எடுத்தது டெல்லி கேப்பிடல்ஸ்.

பிரிதிவி ஷா 4 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 41 பந்துகளில் 66 ரன்களையும் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் வேகப்பந்து வீச்சையும் நான் அடித்து நொறுக்குவேன் என்று ஆடி 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 38 பந்துகளில் 88 ரன்களை விளாச, ரிஷப் பந்த்17 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். முன்னதாக ஷிகர் தவணும் சோடை போகாமல் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 16 பந்துகளில் 26 ரன்கள் விளாச 229 ரன்களை குவித்தது டெல்லி கேப்பிடல்ஸ்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி நிதிஷ் ராணா (58), ஷுப்மன் கில் (28) ஆகியோரது அடி மூலம் 8 ஓவர்களில் 72/1 என்று நல்ல நிலையில் இருந்தது, ரஸல், தினேஷ் கார்த்திக், மோர்கன், ராகுல் திரிபாதி இருந்தனர். ஆனால் 72/1லிருந்து 122/6 என்று என்று 5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்தாலும் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

ஒரு கட்டத்தில் 61 பந்துகளில் 135 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. நிச்சயம் இது பாதுகாப்பானது என்றுதான் ஷ்ரேயஸ் அய்யர் நினைத்திருப்பார். ஆனால் மோர்கன் என்ற அசுரன் இருக்கிறார் என்ற நினைவு இல்லை, மைதானமும் சிறிதுதான் ஒரு சிக்சர் போனால் சிக்சர் மழை பொழியும் என்பதெல்லாம் கேப்டன்களுக்குத் தெரியும். 24 பந்துகளில் 78 ரன்கள் என்ற நிலைக்கு வந்தது. 4 ஒவர்களில் 78 என்றால் ஓவருக்கு 19 ரன்களுக்கும் மேல். மோர்கன் போன்ற அசுரனாலும் முடியாது என்றே அனைவரும் கருதுவார்கள்.

அடுத்த 2 ஓவர்களில் நடந்தது ஷ்ரேயஸ் அய்யருக்கு நம்ப முடியாத ஒரு தன்மையை ஏற்படுத்தியது, ஒரு முறை வலுவான ஜெர்மனிக்கு எதிராக ஹாக்கி போட்டியில் இந்திய வீரர் மொஹீந்தர் பால் சிங் அடுத்தடுத்து 4 கோல்களை அடித்து 5-5 என்று ஆட்டம் டிரா ஆன போது ஜெர்மனி கேப்டன் இதைத்தான் சொன்னர், என்ன நடந்தது என்றே தெரியவில்லை என்றார்.

அப்படித்தான் 17வது ஒவரை ஸ்டாய்னிஸ் வீசினார். திரிபாதி முன் காலை விலக்கிக் கொண்டு மிட்விக்கெட் மீது சிக்ஸ் விளாசினார். அடுத்த பந்தும் புல்டாஸ் சிக்ஸருக்குப் பறந்தது. பிறகு தேர்ட்மேனில் ஒரு பவுண்டரி, இன்னொரு தாழ்வான புல்டாஸ் மீண்டும் ஆன் திசையில் சிக்ஸ் பறந்தது. 24 ரன்களை திரிபாதி விளாசினார்.

18வது ஓவரை மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ரபாடா வீசினார். முதல் பந்து பவுன்சர் டாப் எட்ஜ் ஆகி மோர்கன் கணக்கில் 6 ரன்கள். அடுத்த பந்து ஸ்லோயர் ஒன் ஆனால் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ். மீண்டும் புல்டாஸ் அதே இடத்தில் சிக்ஸ். ஹாட்ரிக் சிக்ஸ் ரபாடா ஓவரில்!! கடைசி பந்தை திரிபாதி மிட் ஆஃபில் 4 ரன்கள், 23 ரன்கள் இந்த ஓவரில் 2 ஒவர்களில் 47 என்றவுடன் இலக்கு அடுத்த 2 ஓவர்களில் 31 ரன்கள் என்றானது.

ஆனால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் நார்ட்யே நேராக, வீசினார், வேகமாக வீசினார், அடிக்க இடம் கொடுக்கவில்லை என்பதோடு மோர்கன் விக்கெட்டையும் வீழ்த்தினார். மோர்கன் 18 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுக்க ராகுல் திரிபாதி 16 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 36 ரன்கள் விளாசினார், ஆனால் நோர்ட்டியே ஓவரில் 5 ரன்களே வர மோர்கனும் வெளியேற ஆட்டம் முடிந்து போனது, 210/8 என்று முடிந்தது கொல்கத்தா, ஆனால் மோர்கன், திரிபாதி கிலி ஏற்படுத்தி விட்டனர்.

ராகுல் திரிபாதி எப்பவுமே சிறப்பாக ஆடுபவர்தான், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் சிறப்பாக ஆடி வந்த காலத்தில் அவர் டவுன் ஆர்டரை மாற்றி அவரைக் காலி செய்தார்கள். இப்போது மீண்டும் திரிபாதி எழுச்சி பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x