Published : 04 Oct 2020 08:22 AM
Last Updated : 04 Oct 2020 08:22 AM

கடும் வெப்பம்.. 2 ரன்கள் ஓடுவதற்குள் நாக்குத் தள்ளுகிறது, மீண்டும் ஆக்ஸிஜனைப் பெற சற்று நேரம் பிடிக்கிறது: கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ஸ்டீவ் ஸ்மித் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோற்றது.

ஸ்டீவ் ஸ்மித் நேற்று 5 ரன்களில் உதனா வீசிய வைடு பந்தை ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராயல் சாலஞ்சர்ஸ் அணி படிக்கால் மற்றும் விராட் கோலியின் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பினால் 8 விக்கெட்டுகளில் வென்று அட்டவணையில் முதலிடம் பிடித்தது.

தோல்வி குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது அபுதாபி வெயில், இரவு நேரத்திலும் கடும் உஷ்ணம் பற்றி குறிப்பிட்டார், அன்று தோனியும் 2 ரன்கள் ஓடினால் கொஞ்சம் சிக்கலாகவே இருப்பதாகத் தெரிவித்தார். கடும் வியர்வையினால் உடலில் உள்ள நீர்ச்சத்து விரைவில் வறண்டு விடும் அபாயம் துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

“நாங்கள் இன்னும் நன்றாக ஆடியிருக்கலாம். போதிய ரன்கள் இல்லை. ஆனால் இது நல்ல பிட்ச். கூட்டணி பேட்டிங் அமையவில்லை. ஜோப்ரா ஆர்ச்சர் தனிச்சிறப்பாக வீசினார். எங்கள் லெக் ஸ்பின்னர்கள் நன்றாக வீசினர். நாங்கள் கூடுதலாக ரன்களை எடுத்திருந்தால் சவால் அளித்திருக்கலாம்.

எங்கல் டாப் 3 நன்றாக பேட் செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. கடந்த 2 போட்டிகள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. லோம்ரார் இக்கட்டான தருணத்தில் நன்றாக ஆடினார். அதனால் 155 ரன்கள் வந்தது. இந்த ஸ்கோரையே எட்டுவோமா என்பதே சந்தேகமாக இருந்தது. லோம்ரார் முதிர்ச்சியுடன் ஆடினார்.

இன்னும் சில ஓட்டைகளை அடைக்க வேண்டியுள்ளது, சில விஷயங்களைச் சரி செய்தால் போதுமானது, மிகவும் வெப்பமாக உள்ளது, 2 ரன்கள் ஓடுவதற்குள் நாக்குத்தள்ளுகிறது, மீண்டும் ஆக்ஸிஜனைப் பெற சற்று நீண்ட நேரம் பிடிக்கிறது” என்றார் ஸ்டீவ் ஸ்மித்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x