Published : 14 Jan 2020 08:54 AM
Last Updated : 14 Jan 2020 08:54 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளதை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது:
ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் ஆகிய மூவருமே விளையாடும் வாய்ப்புள்ளது. 4-வது இடத்தில் களமிறங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. அதற்கான சாத்தியம் உள்ளது. நான் களமிறங்கும் பேட்டிங் வரிசையை எனது உடைமையாக கருதுவது கிடையாது.
இந்தியாவுக்கு கடந்த முறை வருகை தந்த அணியை விட தற்போதைய ஆஸ்திரேலிய அணி வலுவானதாக உள்ளது. பலம் குறைந்திருந்த போதிலும் கடந்த முறை ஆஸ்திரேலிய அணிதொடரை வென்றிருந்தது. அதற்கு முந்தைய தொடரில் அவர்கள் முழுபலத்துடன் இருந்தார்கள், ஆனால் நாங்கள் தொடரை வென்றோம்.
அனுபவம் வாய்ந்த, திறன் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தாலும் ஒரு தொடரில் ஒட்டுமொத்த அணியாக சிறப்பாக விளையாடவில்லை என்றால்வெற்றி பெற முடியாது. கடந்த முறை இதுதான் எங்களுக்கு நடந்தது. நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த போது அவர்களுக்கும் இந்த நிலையே ஏற்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான தொடர்எந்த அளவுக்கு போட்டித்தன்மை நிறைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. ஒரு தரப்பு மட்டும் ஆதிக்கம் செலுத்தும் தொடர் அல்ல இது. எப்போதும் வெற்றி கணக்கு என்பது 3-2 அல்லது 2-1 என்றே இருக்கும். 5 ஆட்டங்கள் கொண்ட தொடராக இருந்திருந்தால் உற்சாகமாக இருந்திருக்கும்.
ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக அளவிலான ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்றனர். இதனால் அவர்கள் இந்திய ஆடுகளங்களில் நல்ல அனுபவங்களை பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது என்பது எப்போதுமே சிறப்பானது மற்றும் கடினமான சவால் நிறைந்தது. இவ்வாறு விராட் கோலி கூறினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT