Last Updated : 29 Jul, 2015 10:04 AM

 

Published : 29 Jul 2015 10:04 AM
Last Updated : 29 Jul 2015 10:04 AM

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு கணிசமான பதக்க வாய்ப்பு

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பலம் வாய்ந்த அணி களமிறக்கப்படுகிறது. அதனால் இந்த முறை இந்தியாவுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் சர்வதேச தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் இருவர் இடம்பெறுவது இதுவே முதல்முறையாகும். இந்திய வீராங்கனை சாய்னா தற்போது 2-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 2011-ல் வெண்கலப் பதக்கம் வென்றபோது, உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 28 ஆண்டுகளாக பதக்கம் வெல்லாமல் இருந்த குறை தீர்ந்தது. இந்தியாவின் பி.வி.சிந்து 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அதேநேரத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான இந்தியாவின் சாய்னா நெவால், இதுவரை உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றதில்லை. இதுவரை விளையாடிய 5 முறையும் காலிறுதியைத் தாண்டியதில்லை.

உலக சாம்பியன்ஷிப்பின் முதல் சுற்றில் ‘பை’ பெற்றுள்ள சாய்னா, காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் வாங் இகனை சந்திக்க வாய்ப்புள்ளது.

ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மைக்கேலை சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் காஷ்யப், நெதர்லாந்தின் எரிக்குடன் மோதவுள்ளார்.

இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் ‘பை’ பெற்றிருக்கிறார். அவர் தனது 3-வது சுற்றில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் லீ ஸியூரூயை சந்திக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x