Published : 16 Sep 2019 12:36 PM
Last Updated : 16 Sep 2019 12:36 PM

சிஎஸ்கேவில் தோனியின் நிலை என்ன?- என்.சீனிவாசன் பதில்

இந்திய அணி வீரர் தோனி ஓய்வு குறித்து பல வதந்திகள் நாளுக்கு நாள் எழுந்து வரும் நிலையில் சிஎஸ்கேவில் தோனியின் எதிர்காலம் குறித்து அந்த அணி உரிமையாளர் என். சீனிவாசன் பதிலளித்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அப்போதைய கேப்டன் தோனியுடன் இணைந்து விளையாடிய படத்தை ட்விட்டரில் பதிவிட்டார்.

இந்த ட்வீட்டைத் தொடர்ந்து தோனி ஓய்வுபெறப் போவதை மறைமுகமாக கோலி கூறி இருக்கிறார் என்றும், செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி அறிவிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் தோனியின் பெயர் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. ரசிகர்கள் உண்மையில் தோனி ஓய்வு பெறப் போகிறாரா என்று குழப்பம் அடைந்தனர்.

இந்நிலையில் பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், பத்திரிகையாளர்களைச் சந்தித்து இது தொடர்பான செய்தி வதந்தி என்று பதிலளித்தார். இதனை தோனி மனைவி சாக்‌ஷியும் உறுதிப்படுத்தினார்.

எனினும் தோனியின் ஓய்வு குறித்த பல வதந்திகள் தற்போதும் உலா வரும் நிலையில் இதுபற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் என். சீனிவாசனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில், "நான் ஒன்றுக்கு மட்டும்தான் தற்போது உறுதியாக பதில் கூற முடியும், மகேந்திர சிங் தோனி மட்டுமே அடுத்த சீசன் ஐபிஎல் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன்” என்று தெரிவித்தார்.

இந்த பதிலை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x