Published : 13 Jul 2015 09:33 AM
Last Updated : 13 Jul 2015 09:33 AM

ஜிம்பாப்வேயை 62 ரன்களில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜிங்க்ய ரஹானே தலைமையிலான இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள், 2 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியை இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

2-வது போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. முதல் ஒரு நாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்ததால், இம்முறை இந்திய வீரர்கள் கவனமாக ஆடினர்.

ரஹானே, முரளி விஜய் ஜோடி நிதானமாகவும் ஆடியது. தவறான பந்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து பவுண்டரிக்கு விரட்டியது. இதனால், ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. கேப்டன் ரஹானே 73 பந்துகளில் அரைசதம் எடுத்தார். இந்தியா 100-வது ரன்னை 23.1-வது ஓவரில்தான் எட்டியது.

அணியின் எண்ணிக்கை 112 ஆக இருந்த போது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகளும் அடங்கும். ஒரு நாள் போட்டிகள் சோபிக்காமல் இருந்த முரளி விஜய் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு ஆடினார். அவர் 81 பந்துகளில் அரைசதம் கடந்தார். முரளியுடன் அம்பட்டி ராயுடு இணைந்தார்.

இந்த ஜோடி கொஞ்சம் வேகமாக ஆடியது. முரளி 72 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அதன் பின் ராயுடு 41 ரன்களில் ஆட்டமிழந்தார். மனோஜ் திவாரி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆட முயன்ற உத்தப்பா 13 ரன்களிலும், பின்னி 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அக் ஷர் படேல் ஒரு ரன்னில் வீழ்ந்தார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 271 ரன்கள் எடுத்தது.

ஜிம்பாப்வே தரப்பில் மாட்ஸிவா 49 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கட்டுக்கோப்பான பந்துவீச்சு

272 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வேயின் சிபாண்டா 2 ரன்களில் வெளி யேறினார். மஸகாட்ஸா (5), சிகும்பரா (9) சொற்ப ரன்களில் வெளியேறினர். சிபாபா மட்டும் தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 78 ரன்களில் அரைசதம் எடுத்தார். வில்லியம்ஸ் 20 ரன்களில் வெளியேறினார்.

நன்றாக ஆடி வந்த சிபாபா 72 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்க வில்லை. இதனால் அந்த அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. புவனேஷ் குமார் 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டு களைக் கைப்பற்றினார். குல்கர்னி, ஹர்பஜன், பின்னி, அக் ஷர் படேல் தங்கள் பங்குக்கு தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

முரளி விஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x