Published : 26 Jul 2015 11:42 AM
Last Updated : 26 Jul 2015 11:42 AM
வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டி டிராவில் முடிந்தது.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 83.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 116.1 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் 78 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 21.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-வது நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வான் ஸில் 33, எல்கர் 28 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
சிட்டகாங்கில் பெய்த பலத்த மழை காரணமாக 4-வது நாள் ஆட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்ட நிலையில், 5-வது நாளான நேற்றைய ஆட்டமும் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. பகல் 12 மணியளவில் 5-வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. அறிமுகப் போட்டியில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT