Published : 21 May 2015 04:48 PM
Last Updated : 21 May 2015 04:48 PM

இரண்டு கேப்டன்களுக்கான சவால்: சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை

இந்திய ஒருநாள் கேப்டன் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே வெள்ளிக்கிழமை ராஞ்சியில் இறுதிக்கு முன்னேறுவதற்கான முக்கிய ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.

கேப்டன் கூல் தோனிக்கும் ஆக்ரோஷமான கேப்டன் விராட் கோலிக்கும் இடையேயான தன்னம்பிக்கை சோதனைப் போட்டியாக இது நாளை அமையும். தோனியின் நுட்பத்துக்கும் அனுபவத்துக்கும் கோலியின் அதிரடிக்கும் இடையேயான போட்டியாக இது அமையும் என்று ரசிகர்களிடையே இந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு பயங்கரமாக கூடியுள்ளது.

முந்தைய போட்டித் தொடர்களை வைத்துப் பார்க்கும் போது சென்னை சூப்பர் கிங்ஸ்தான் வெற்றி பெற சாதகங்கள் இருப்பதாக தெரிகிறது.

இந்தத் தொடரில் இருமுறை இந்த இரு அணிகளும் எதிர்த்து விளையாடிய போது இரண்டிலும் சென்னை வெற்றி பெற்றிருக்கிறது. லீக் சுற்றுகளில் இரண்டு போட்டிகளில் முறையே 27 மற்றும் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோனி அணி விராட் கோலி அணியை தோற்கடித்துள்ளது.

ஆனால் நடப்பு பார்ம் படி பார்த்தால் பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பு கொஞ்சம் கூடுதலாக தெரிகிறது. மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதாக மடிந்தது, மற்றும் தோனியின் பேட்டிங் பார்ம், அவரது கேப்டன்சி பிழைகள் ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும் போது பெங்களூருவுக்கு வாய்ப்புகள் கூடியிருப்பதாக தெரிகிறது.

அன்று முதல் 6 ஓவர்களில் அஸ்வின், நெஹ்ரா இருவரையும் பயன்படுத்தியது, ஜடேஜாவுக்கு 2 ஓவர்களே கொடுத்தது, ரெய்னா ஆட்டமிழந்தவுடன் தோனியின் ஷாட் தேர்வு ஆகியவை சென்னை அணிக்கு பலவீனமாக அமைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஐபிஎல் தொடர்களில் மிகவும் அபாரமான அணி என்றால் அது சென்னைதான். இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது, மேலும் இறுதிக் கட்டத்துக்கு 5 முறை தகுதி பெற்றுள்ளது.

இந்தத் தொடரில் பேட்டிங்கில் பிரெண்டன் மெக்கல்லமின் அதிரடி பங்களிப்பு, ஆஷிஷ் நெஹ்ராவின் எதிர்பாராத எழுச்சி, மற்றும் டிவைன் பிராவோவின் கடைசி கட்ட பந்து வீச்சு மற்றும அவரது பீல்டிங், அஸ்வினின் பயனுள்ள சிக்கனப் பந்து வீச்சு ஆகியவற்றினால் சென்னை அணி வெற்றி பெற்றது.

ஆனால் பிரெண்டன் மெக்கல்லம் இடத்தை இப்போது இட்டு நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேண்டுமானால் தோனி தொடக்கத்தில் களமிறங்கி அப்படியொரு ஆட்டத்தை முயன்று பார்க்கலாம், அவரது ஃபார்மையும் அது வெகுவாக உயர்த்துவதோடு, அடுத்தடுத்த இந்திய தொடர்களில் தோனியின் பேட்டிங் தன்னம்பிக்கை இந்திய அணிக்கு உதவும். அவருக்கும் இனி இந்த 2 வடிவங்கள் மட்டுமே உள்ளது. இதில் விரைவு ரன்களைக் குவிக்க என்ன பயிற்சிகள் செய்ய வேண்டுமோ அதனை அவர் செய்து தன்னை தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஏற்கெனவே தோனி வெறும் ‘மேலாண்மை’ கேப்டனாக மாறிவிட்டார் என்று பலரும் கருத நேரிட்டுள்ளது. அதாவது அணியை களத்தில் நிர்வகிப்பதை மட்டுமே செய்கிறார், கேப்டனாக தனது சொந்த ஆட்டத்திறன் மூலம் வழிநடத்தும் தலைமைத்துவம் அவரிடம் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் மற்ற வீரர்களிடம் தனது பரிசோதனைக் காய்களை நகர்த்தும் தோனி, கொஞ்சம் சுயபரிசோதனையிலும் ஈடுபடுவதில் தவறில்லை.

சென்னை அணி பந்துவீச்சிலும் நாளை திறமையுடன் செயல்படவேண்டும், ஏனெனில் கெயிலுக்கு ஆட்டம் பிடித்தாலோ, கோலிக்கு ஆட்டம் பிடித்தாலோ பின்பு டிவில்லியர்ஸ் வந்து காய்ச்சி எடுத்து விடுவார். எனவே நல்ல திட்டமிடுதல் அவசியம்.

பவன் நெகி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்துள்ள தோனி ஜடேஜாவை நீக்க மறுத்து வருகிறார். எனவே தோனி தனது கன்சர்வேட்டிவ் அணுகுமுறைகளைக் கைவிட்டு கொஞ்சம் கற்பனைத் திறனுடன் கிரியேட்டிவ் ஆக செயல்படுவது அவசியம்.

பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க்குடன் பெங்களூரு பலமாகத் திகழ்கிறது. எனவே தோனி தனது ‘மேலாண்மை’ அணுகுமுறையை விடுத்து ஆக்ரோஷ தலைமைத்துவ அணுகுமுறைக்கு திரும்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எது எப்படியிருந்தாலும் நல்ல சவாலான கிரிக்கெட் ஆட்டம் மூலம் ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x