Published : 16 Mar 2015 03:22 PM
Last Updated : 16 Mar 2015 03:22 PM

மெக்கல்லம், தில்ஷன் கொடுத்த அடியிலிருந்து மீண்டு வர ஜான்சன் தீவிர முயற்சி

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸி. வேகப்புயல் ஜான்சன் எப்படியும் எதிரணியினரை கதிகலங்கச் செய்வார் என்று எதிர்பார்க்கபப்ட்டது.

ஆனால், அவருக்குப் பதிலாக சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் மற்றொரு ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்.

நியூசி. அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் அன்று மிட்செல் ஜான்சை கேட்டுக் கேட்டு அடித்தார். 4 ஓவர்களில் 52 ரன்களைக் கொடுத்தார் மிட்செல் ஜான்சன். அதன் பிறகு இலங்கையின் திலகரத்னே தில்ஷன் ஒரே ஓவரில் ஜான்சனை 6 பவுண்டரிகள் விளாசினார். மெக்கல்லம், ஜான்சனின் திசை மற்றும் அளவை பாதிக்கும் விதமாக அதிரடி காட்டினார், என்றால் தில்ஷன் மிகவும் அனாயசமாக முறையான கிரிக்கெட் ஷாட்களில் 6 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார்.

அனைத்து கிரிக்கெட்டிலும் இதற்கு முன்னர் இந்தியாவின் தற்போதைய அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல், பாப் வில்லிஸ் பந்துவீச்சை டெஸ்ட் போட்டி ஒன்றில் தொடர்ச்சியாக 6 பவுண்டரிகள் விளாசியுள்ளார். அதன் பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேலின் ஒரே ஓவரில் மே.இ.தீவுகளின் ராம் நரேஷ் சர்வாண் 6 பவுண்டரிகளை டெஸ்ட் போட்டிகளில் விளாசியுள்ளார். அதன் பிறகு மீண்டும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் 6 பவுண்டரிகளை வாங்கிக் கட்டிக் கொண்டவர் என்ற முறையில் மிட்செல் ஜான்சனின் தன்னம்பிக்கை தற்போது கொஞ்சம் ஆடிப்போயுள்ளது.

இந்நிலையில் மெக்கல்லம், தில்ஷன் கொடுத்த அடியிலிருந்து மீண்டு வருவது பற்றி பேசிய ஜான்சன், “தில்ஷனுக்கு எதிரான அந்த குறிப்பிட்ட ஓவர் மோசமானது என்று கூற மாட்டேன். முதலில் ஓவர் பிட்ச் பந்துகளை வீசினேன், பிறகு லெந்த்துக்கு சற்று பின்னால் வீசினேன். ஆனால் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து வீசினேன், அதுதான் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மற்ற பந்துகள் சரியானதுதான்.

ஆனால், அதன் பிறகு அந்தப் போட்டியில் மீண்டும் வந்து சிறப்பாக வீசினோம். அந்தப் பிட்ச் கொஞ்சம் மந்தமாகும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் அது மாறவேயில்லை. அதிர்ஷ்டவசமாக நாங்கள் நிறைய ரன்களைக் குவித்திருந்தோம்.

எனவே அடிவாங்கியது பற்றி எந்த மன அழுத்தமும் இல்லை. இந்தத் தொடர் முழுதுமே அடிவாங்குவேன் என்பதில் ஓரளவுக்கு நான் தெளிவாகவே இருந்தேன். இன்றைய ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் அப்படிப்பட்டது.

காலிறுதி வந்துவிட்டது, அதே பிராண்ட் கிரிக்கெட்டை நாங்கள் தொடர்வோம் என்றே கருதுகிறேன்.

எனக்கு முன்னால் என்ன வருகிறதோ, அதனை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டேன். அடிவாங்கியது பற்றிய மன அழுத்தங்கள் இல்லை.” என்றார் ஜான்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x