Published : 10 Aug 2017 10:42 AM
Last Updated : 10 Aug 2017 10:42 AM
லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, தேவிந்தர் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் 19 வயதான நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. உலக ஜூனியர் போட்டியில் சாதனை படைத்துள்ள அவர், இம்முறை பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இந்த சீசனில் அதிகபட்சமாக 85.63 மீட்டர் தூரம் எறிந்துள்ள நீரஜ் சோப்ரா, சர்வதேச தடகள தரவரிசை பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளார். தனது தனிப்பட்ட சாதனையாக 86.48 மீட்டர் தூரம் வைத்துள்ள நீரஜ் சோப்ரா, பதக்கம் வெல்ல வேண்டுமானால் அதைவிட சில மீட்டர்கள் தூரம் கூடுதலாக ஈட்டியை எறிய வேண்டும்.
ஏனேனில் ஜெர்மனியை சேர்ந்த ஜோகன்னஸ் வெட்டர், தாமஸ் ரோலர் ஆகியோர் இந்த ஆண்டில் 90 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளனர். மேலும் இம்முறை களறமிங்க உள்ளவர்களில் 8 பேர், 87.64 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறியும் திறனை பெற்றுள்ளனர். இதனால் நீரஜ் சோப்ரா, தேவிந்தர் சிங்குக்கு கடும் சவால் காத்திருக்கிறது.
நீரஜ் சோப்ரா பங்கேற்கும் தகுதி சுற்று இந்திய நேரப்படி இரவு 11.35 மணிக்கும், தேவிந்தர் சிங் பங்கேற்கும் தகுதி சுற்று போட்டி நள்ளிரவு 1.05 மணிக்கும் நடைபெறுகிறது. நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு எளிதில் தகுதி பெறுவார் என கருதப்படுகிறது. அதேவேளையில் தேவிந்தர் சிங் சவாலை சந்திக்கக்கூடும். ஏனேனில் அவரது தனிப்பட்ட சாதனை 84.57 மீட்டர் தூரம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT