Published : 17 Aug 2017 10:04 AM
Last Updated : 17 Aug 2017 10:04 AM
இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இடது கை பேட்ஸ்மேனான உபுல் தரங்கா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை முதல் முறையாக உபுல் தரங்கா வழிநடத்த உள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை சொந்த மண்ணில் இலங்கை அணி இழந்திருந்ததால் கேப்டன் பதவியை ஏஞ்சலோ மேத்யூஸ் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொடருக்கான அணியில் ஆல்ரவுண்டர்களான திசரா பெரேரா, மிலின்டா ஸ்ரீவர்தனா ஆகியோர் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். வேகப் பந்து வீச்சாளரான மலிங்காவும் அணியில் இடம் பெற்றுள்ளார். டெஸ்ட் தொடரில் காயம் அடைந்த நூவன் பிரதீப், குணரத்னே ஆகியோருடன் ஜிம்பாப்வே தொடரில் விளையாடிய அஷிதா பெர்னாண்டோ, நூவன் குலசேகரா, லகிரு குமரா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வரும் 20-ம் தேதி தம்புலாவிலும், 2-வது ஒருநாள் போட்டி 24-ம் தேதி பல்லேகலேவிலும், 3-வது ஒருநாள் போட்டி 27-ம் தேதி பல்லேகலேவிலும், 4-வது ஒருநாள் போட்டி 31-ம் தேதி கொழும்புவிலும், 5-வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 3-ம் தேதி கொழும்புவிலும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘ரசிகர்களின் ஆதரவு வேண்டும்’
இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்கா கூறும்போது, “ஒவ்வொரு அணிக்கும் சோதனையான காலக்கட்டம் வரும். இது ஒரு சுழற்சி போன்றது. எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும். குறுகிய வடிவிலான ஆட்டத்தில் இலங்கை அணி எப்போதும் வலுவாக உள்ளது. வலிமையுடன் மீண்டு வந்து இந்தியாவை வீழ்த்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களிடம் திறமை, கடின உழைப்பு உள்ளது. உரிய உத்வேகமும், ரசிகர்களின் ஆதரவும் தான் தற்போது எங்களுக்கு தேவை” என்றார்.
இலங்கை அணி விவரம்:
உபுல் தரங்கா (கேப்டன்), ஏஞ்சலோ மேத்யூஸ், நிரோஷன் திக்வெலா, தனுஷ்கா குணதிலகா, குஷால் மெண்டிஸ், சமரா கபுகேதரா, மிலின்டா ஸ்ரீவர்தனா, அகிலா தனஞ்ஜெயா, லக் ஷன் சந்தகன், திசரா பெரேரா, வானிடு ஹசரங்கா, மலிங்கா, துஷ்மந்தா ஷமீரா, விஷ்வா பெர்னாண்டோ. - ஏ.என்.ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT