Last Updated : 21 Jul, 2017 03:53 PM

 

Published : 21 Jul 2017 03:53 PM
Last Updated : 21 Jul 2017 03:53 PM

இறுதியில் இங்கிலாந்துக்கு எதுவும் சுலபமாக இருக்காது: மிதாலி ராஜ் எச்சரிக்கை

வரும் ஞாயிறன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதுவும் சுலபமாக இருக்காது என்று இந்திய கேப்டன் மிதாலி ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதாவது கடும் சவால் காத்திருக்கிறது இங்கிலாந்து அணிக்கு என்று மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

“இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஒரு அணியாக எங்கள் அனைவருக்குமே மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தொடர் எளிதாக இருக்காது என்பதை நாங்கள் அறிந்தேயிருந்தோம். ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வீராங்கனைகள் திரண்டெழுந்து வெற்றியைச் சாதித்ததே முக்கியம்.

இங்கிலாந்துக்கு கண்டிப்பாக ஒன்றும் எளிதாக இருக்காது. ஆனாலும் அன்றைய தினத்தில் எப்படி ஆடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது, முதல் போட்டியில் எங்களிடம் தோற்ற பிறகே இங்கிலாந்தும் உச்சத்தில் ஆடிவருகிறது எனவே சரியான திட்டமிடல் தேவை.

மேலும் அவர்கள் சொந்த மண்ணில் இறுதியில் அவர்களை எதிர்கொள்வது எப்போதும் சவாலானதே. ஆனால் இந்த அணி எதற்கும் தயாராகவே உள்ளது.

ஹர்மன் இன்னிங்ஸ் விதிவிலக்கான ஒரு இன்னிங்ஸ். பவுலர்களும் நன்றாக வீசினர். ஜுலன் கோஸ்வாமி அவரது ரிதத்தை கண்டுபிடித்துக் கொண்டார். இந்த அணி தற்போது நல்ல வடிவத்தில் உள்ளது.

தோல்விக்குப் பிறகு நியூஸிலாந்தை வீழ்த்தி, பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஒரு பெரிய சாதனையே.

ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீராங்கனை எழுந்து நிற்கிறார், இங்கிலாந்துக்கு எதிராக ஸ்மிருதி நன்றாக ஆடினார். பூனம் ராவத் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடினார். நேற்று ஹர்மன். எனவே முன்வரிசை வீராங்கனைகள் தேவைப்படும் நேரத்தில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பவுலிங்கும் அதற்கேற்ப சிறப்பாக இருந்து வருகிறது.

2005-க்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிக்குள் நுழைந்துள்ளோம், இறுதியில் வெற்றிபெற்றால் அது இந்தியாவில் மிகப்பெரிய விஷயமாக வரவேற்கப்படும். இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இது ஒரு புரட்சியாக அமையும்” என்றார் மிதாலி ராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x