Published : 28 Jul 2017 08:58 AM
Last Updated : 28 Jul 2017 08:58 AM
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோற்றாலும், ரசிகர்களின் இதயங்களை இந்திய அணி வென்று விட்டது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பாராட்டியுள்ளார்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. 8 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்தது. இதற்காக இந்திய மகளிர் அணியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தாய்நாடு திரும்பிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் நேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது கிரிக்கெட் வீராங்கனைகளிடம் பேசிய விஜய் கோயல், “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-வது இடத்தைப் பிடித்தது இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. விளையாட்டுத் துறையில் அதிக ஆர்வம் செலுத்த இளைஞர்களை இந்த வெற்றி தூண்டியுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெல்லாவிட்டாலும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டிகள் பாராலிம்பிக் போட்டிகள், பாட்மிண்டன், மல்யுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட் விளையாட்டிலும் இந்திய பெண்கள் சாதனை புரிந்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய மகளிர் செய்துள்ள சாதனை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் ஆடும் இளம் இந்திய வீரர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
இந்த சந்திப்பின்போது பேசிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு இந்திய வீராங்கனையும் சிறப்பாக ஆடினார்கள். எங்களுக்கு உற்சாகம் அளித்த பிரதமருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT