Last Updated : 11 Jul, 2017 07:15 PM

 

Published : 11 Jul 2017 07:15 PM
Last Updated : 11 Jul 2017 07:15 PM

பயிற்சியாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: பிசிசிஐ அறிவிப்பு

2019 உலகக்கோப்பை வரை ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை பிசிசிஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கிரிக்கெட் ஆலோசனைக் குழு இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிசிசிஐ பொறுப்புச் செயலர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

“புதிய பயிற்சியாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. கிரிக்கெட் நிர்வாகக் குழு இன்னும் பரிசீலனைதான் செய்து வருகிறது. இது குறித்து வெளியான செய்திகளில் உண்மையில்லை” என்றார் திட்டவட்டமாக.

பயிற்சியாளர் அறிவிப்பை நிறுத்தி வைத்திருப்பதாகவே செய்திகள் வெளியாகிய வேளையில் உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழுத் தலைவர் விநோத்ராய் செவ்வாய்க்கிழமைக்குள் புதிய பயிற்சியாளரை அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

கிரிக்கெட் நிர்வாகக் குழு ரவி சாஸ்திரி, சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், ராஜ்புத் ஆகியோரை நேர்காணல் செய்தது. ஆனால் விராட் கோலியிடம் விவாதிப்பதற்காக அறிவிப்பை தாமதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சில ஊடகங்கள் ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட தற்போது அது மறுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x