Published : 11 Apr 2014 11:13 AM
Last Updated : 11 Apr 2014 11:13 AM

சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவேன்: கெவின் பீட்டர்சன் நம்பிக்கை

சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைப்பேன் என்ற நம்பிக்கை இப்போதும் எனக்கு இருக்கிறது என இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வி கண்டதைத் தொடர்ந்து அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கெவின் பீட்டர்சனுக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டது. 7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பீட்டர்சன் இது தொடர்பாக மேலும் கூறுகையில், “நான் இங்கிலாந்து அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டிருந்தாலும், மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை இதுவரை கைவிட்டு விடவில்லை. நான் அணிக்கு திரும்புவதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களையும் குவிக்கலாம்” என்றார்.

2005-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பீட்டர்சன், இதுவரை 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,181 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 4-வது இடத்தில் உள்ள பீட்டர்சன், தற்போது விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

பீட்டர்சன் அதிரடியாக நீக்கப்பட்டபோது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவு சரியானது எனக் கூறியிருந்த இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக், “அதை துணிச்சலான முடிவு” என்றும் வர்ணித்திருந்தார்.

அது குறித்துப் பேசிய பீட்டர்ன், குக்குடனான நட்புறவு உடைந்து போன ஒன்று. அதை இனி சரி செய்யமுடியாது. ஆனால் முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ் குறித்து கேலி செய்து நான் எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தாலும்கூட, இப்போது நானும்அவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். 2012-ல் ஸ்டிராஸ் குறித்து நான் அனுப்பிய எஸ்எம்எஸ் விவகாரம் மிக மோசமான ஒன்று” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x