Published : 17 Feb 2017 04:40 PM
Last Updated : 17 Feb 2017 04:40 PM

ஆஸ்திரேலியாவுக்கு ‘ஒயிட் வாஷ்’ - ஹர்பஜன் கணிப்பு

வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந்த அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வியடையும் என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியா நன்றாக ஆடினால் இந்தியா 3-0 என்று வெல்லும், அதாவது ஆஸ்திரேலிய நன்றாக விளையாடினால்... இல்லையேல் 4-0.

பிட்ச்கள் அவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. முதல் பந்திலிருந்தே ஸ்பின் எடுக்க தொடங்கினால் அவர்கள் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க மாட்டார்கள்.

இந்த ஆஸ்திரேலிய அணி ஸ்மித், வார்னர் நீங்கலாக ஆஸ்திரேலிய பாணியில் இங்கு ஆடுவதற்கான வலுவில்லாதது.

கடந்த ஆஸ்திரேலிய அணிகள் இங்கு ஆடும் போது வெற்றிபெறுவதற்கான தீராத அவாவுடன் ஆடினார்கள். ஆனால் இந்த அணி துணைக்கண்டங்களில் அத்தகைய அவாவைக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் வலுவாக உள்ள இந்திய பேட்டிங்கை அசைக்கும் வாய்ப்பு குறைவு. 4 ஸ்பின்னர்களை அவர்கள் களமிறக்கினாலும் ஆஸ்திரேலியாவில் ஸ்பின் வீசுவதற்கும் இந்தியாவில் வீசுவதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளன. இங்கு பந்தை சரியான வேகத்தில் வீச வேண்டும்.

முதல் பந்திலிருந்தே சரியான வேகத்தில் வீச வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் நிறைய ஸ்பின்னர்கள் இதனை இந்தியாவில் செய்ததில்லை.

இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x