Last Updated : 18 Sep, 2016 05:56 PM

 

Published : 18 Sep 2016 05:56 PM
Last Updated : 18 Sep 2016 05:56 PM

பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில்: ஈரான் வீரர் விபத்தில் மரணம்

பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் ஈரான் சைக்கிள் பந்தய வீரர் பஹ்மான் கோல்பர்னெஸாத்(48) மரணமடைந்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகிறது. இதின் ஆண்களுக்கான சைக்கிள் பந்தயம் நேற்று நடைபெற்றது. இந்த பந்தயத்தில் கலந்துகொண்ட ஈரான் வீரர் பஹ்மான் கோல்பர்னெஸாத், பந்தயத்தின் நடுவில் ஒரு விபத்தில் சிக்கி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு முதலுதவிச் சிகிச்சைகளை செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் காலமானார். விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மாரடைப்பால் அவர் காலமானதாக கூறப்படுகிறது. பஹ்மான் கோல்பர்னெஸாத்தின் மரணம் துரதிருஷ்டவசமானது என்று பாராலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளரான கிரேக் ஸ்பென்ஸ் கூறியுள்ளார்.

பஹ்மான் கோல்பர்னெஸாத்தின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஈரான் ஒலிம்பிக் கிராமத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பிலிப் கிராவன் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2002-ம் ஆண்டுமுதல் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்டு வந்த பஹ்மான் கோல்பர்னெஸாத் 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x