Published : 09 Aug 2016 10:45 AM
Last Updated : 09 Aug 2016 10:45 AM

பர்மிங்காம் டெஸ்டில் பாகிஸ்தான் படுதோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 86 ஓவர்களில் 297 ரன்களும், பாகிஸ்தான் 136 ஓவர்களில் 400 ரன்களும் குவித்தன. முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 129 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 445 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

343 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சில் ஆட்டம் கண்டது. சமி அஸ்லாம் 70 ரன்கள் சேர்த்த நிலையில் எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 151 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு இணைந்த சோஹைல் கான்-ரஹத் அலி ஜோடி இங்கிலாந்து பந்து வீச்சை சோதித்தது. 51 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை மொயீன் அலி பிரித்தார். 37 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்த சோஹைல் கான் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 70.5 ஓவர்களில் 201 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவன் பின், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x