Published : 22 Feb 2017 04:13 PM
Last Updated : 22 Feb 2017 04:13 PM

தடைகளைக் கடந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடுவேன்: இர்பான் பதான் ட்விட்டரில் உருக்கம்

நான் என் வாழ்வில் நிறைய தடைகளைச் சந்தித்து இருக்கிறேன். எனினும் தடைகளைக் கண்டு நான் எடுத்த முயற்சியை கைவிட்டதில்லை. என்னுடைய கடினமான முயற்சியின் மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 2017-ம் ஆம் ஆண்டுக்கான ஏலம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரபல வேகப் பந்துவீச்சாளர் இர்பான் பதான் எந்த அணியினராலும் ஏலம் எடுக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் அவருடைய ரசிகர்கள் இர்பான் பதானுக்கு ஆதரவாகவும், அவரை உற்சாகப்படுத்தும் விதத்திலும் ட்விட்களை பதிவிட்டனர்.

இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் இர்பான் பதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 2010-ம் ஆண்டு என் பின்பகுதியில் 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. என்னைப் பரிசோதித்த உடலியல் நிபுணர் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடக் கூடாது என்றும், எனது கனவுகளை கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அந்தச் சமயத்தில் அவரிடம் நான், எந்த வலியையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் என் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாட முடியாத வலியை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று கூறினேன்.

நான் கடினமாக உழைத்து கிரிக்கெட் விளையாடி, இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன்.

நான் என் வாழ்வில் நிறைய தடைகளைச் சந்தித்து இருக்கிறேன். எனினும் தடைகளைக் கண்டு எடுத்த முயற்சியை கைவிட்டது கிடையாது. இந்தக் குணத்தையே நான் என்றென்றும் பெற்றிருக்க விரும்புகிறேன். தற்போது என் முன்னால் ஒரு தடை இருக்கிறது. நான் இந்தத் தடையை ரசிகர்களாகிய உங்களது பிரார்த்தனையுடனும், வாழ்த்துடனும் கடந்து மீண்டும் வருவேன். இதனை எனக்கு ஆதரவளித்துவரும் எனது ரசிகர்களிடம் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x