Last Updated : 03 Jun, 2016 11:25 AM

 

Published : 03 Jun 2016 11:25 AM
Last Updated : 03 Jun 2016 11:25 AM

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும்.

இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி இம்முறை கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சிறப்பான வகையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க கண்டத்தை சேராத நாடு போட்டியை நடத்துவதும் இதுவே முதன் முறை.

45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடரில் தென் அமெரிக்க கண்டங்களை சேர்ந்த 10 அணிகளும், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளை சேர்ந்த 6 அணிகளும் கலந்து கொள்கின்றன.

தொடரில் பங்கேற்கும் நடப்பு சாம்பியனான சிலி, அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வெடார், பராகுவே, பெரு, உருகுவே, வெனிசுலா ஆகியவை தென் அமெரிக்க கண்டங்களை சேர்ந்த அணிகளாகும். வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளை சேர்ந்த அணிகளாக அமெரிக்கா, மெக்ஸிகோ, கோஸ்டா ரிகா, ஜமைக்கா, ஹைதி, பனாமா ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கால்பந்து திருவிழாவில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் அர்ஜென்டினா, பிரேசில், மெக்ஸிகோ, அமெரிக்கா அணிகளும், 'பி' பிரிவில் சிலி, கொலம்பியா, உருகுவே, ஈக்வெடார் அணிகளும், 'சி' பிரிவில் கோஸ்டா ரிகா, ஜமைக்கா, பனாமா, ஹைதி அணிகளும் 'டி' பிரிவில் பராகுவே, பெரு, பொலிவியா, வெனிசுலா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி ஆட்டங்கள் 16, 17, 18-ம் தேதிகளிலும் அரையிறுதி 21 மற்றும் 22-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.

3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிகள் 25-ம் தேதி மோதும். சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி ஜூன் 26-ல் நடைபெறுகிறது.

தொடரின் முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள போட்டியை நடத்தும் அமெரிக்கா-கொலம்பியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால் இந்திய நேரப்படி இந்த ஆட்டம் நாளை காலை 7 மணிக்கு நடைபெறும். போட்டியை சோனி கிக்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அர்ஜென்டினாவின் கனவு

கோபா அமெரிக்கா கால்பந்து வரலாற்றில் அதிகபட்சமாக உருகுவே 15 முறையும், அர்ஜென்டினா 14 முறையும், பிரேசில் 8 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன. இம்முறை அர்ஜென்டினா அணி பட்டம் வெல்லும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணி கடைசியாக 1993-ம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை வென்றிருந்தது.

அதன் பின்னர் இதுவரை பெரிய அளவிலான தொடர்களில் சாதிக்க வில்லை. 2015-ம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் சிலி அணியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் கனவுடன் இந்த தொடரை எதிர்கொள்கிறது அர்ஜென்டினா அணி.

நட்சத்திர பட்டாளம்

பிரபல நட்சத்திர வீரர்களான அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகுரோ, எவர் பனிகா, உருகுவேயின் லூயிஸ் ஸ்வாரஸ், ஜோஸ் மரியா கிம்மென்ஸி ஜமைக்காவின் வெஸ் மோர்கன், சிலியின் அலெக்சிஸ் சான்செஸ், அர்டுரா விதால், சார்லஸ் அரங்குயிஸி, மெக்ஸிகோவின் ஜாவியர் ஹர்னான்டஸ், அன்ட்ரியாஸ் குவார் டாடு, பிரேசிலின் வில்லியன், கவுடின்கோ, ரெனட்டோ அகுஸ்டோ, அமெரிக்காவின் கிறிஸ்டியன் புலிஸிக், பராகுவேயின் அன்டோனியா சனப்ரியா, பெருவின் பாவ்லோ குயர்ரிரோ, வெனிசுலாவின் அடால்பெர்ட்டோ பெனரன்டா, கொலம்பியாவின் கார்லோஸ் பாஹ்கா என்று முன்னணி நட்சத்திர வீரர்கள் சங்கமிக்க இருப்பதால் இந்த தொடர் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

அர்ஜென்டினா அணியில் கேப்டன் மெஸ்ஸி முதுகுப் பகுதி காயத்தில் அவதிப் பட்டு வருகிறார். இது அந்த அணிக்கு சற்று பின்னடை வாக கருதப்படுகிறது. எனினும் அர்ஜென்டினா முதல் ஆட் டத்தை 6-ம் தேதியே விளையாடுகிறது. அதற்குள் மெஸ்ஸி உடல் தகு தியை எட்டிவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x