Published : 30 Jan 2017 10:33 AM
Last Updated : 30 Jan 2017 10:33 AM
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளர் ராஜேஷ் சாவந்த் மும்பையில் நேற்று ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்தின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் இந்திய அணியினர் மும்பையில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளரான ராஜேஷ் சாவந்த் நேற்று காலையில் பயிற்சிக்கு வரவில்லை. அவரது அறைக்கு சென்று பார்த்தபோது, அது திறக்கப்படாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்களும், கிரிக்கெட் அணி ஊழியர்களும் அறையைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அறைக்குள் ராஜேஷ் சாவந்த், சுயநினைவின்றி கிடந்தார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். 45 வயதான சாவந்துக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜேஷ் சாவந்தின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரங்கல் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT