Last Updated : 20 Aug, 2016 10:05 AM

 

Published : 20 Aug 2016 10:05 AM
Last Updated : 20 Aug 2016 10:05 AM

சிந்து சாதனையின் பின்னால் கோபி சந்த்..

இந்தியாவில் முன்னணி பாட்மிண் டன் வீராங்கனைகளை உரு வாக்கும் துரோணாச்சார்யாவாக உரு வெடுத்துள்ளார் முன்னாள் வீரர் கோபிசந்த். ஹைதராபாத்தில் உள்ள கோபிச்சந்த் பாட்மிண்டன் அகாடமிதான் இந்தியாவின் நட்சத் திர பாட்மிண்டன் வீரர், வீராங் கனைகளை உருவாகும் களம். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்க லம் வென்ற, சாய்னா நெவால் கூட கோபிச்சந்திடம் பயிற்சி பெற்றவர்தான். பெங்களூ

ருவுக்கு சாய்னா இடம் மாறிய பிறகுதான் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து விமல் குமார், சாய்னாவுக்கு பயிற் சியாளராக இருக்கிறார். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சிந்து, கோபிச்சந்தின் சிஷ்யைக ளில் முதல் இடத்தில் இருப்பவர். காந்த் கிடாம்பி, பாருபள்ளி காஷ்யப், குருஷாய் தத், போன்ற வர்களும் கோபிச்சந்த் பயிற்சியில் உருவானவர்கள் தான்.

1973-ம் ஆண்டு, ஆந்திர மாநிலம்,பிரகாசம் மாவட்டத்தில் பிறந்தகோபிச்சந்த்துக்கு சிறு வயதில் கிரிக்கெட்தான் பிடித்த விளையாட்டு. அவரது சகோதரர்தான் கோபிச்சந்தை பாட்மிண்டன்பக்கம் திருப்பினார். உலகின் பழமையான பாட்மிண்டன் தொடரானஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரகாஷ் படுகோன். இந்த பிரகாஷ்படுகோன்தான் கோபிச்சந்தை பட்டைத் தீட்டினார்.

1996 ம் ஆண்டு, முதன் முறையாக தேசியச் சாம்பியன் ஆன கோபிச்சந்த், அதற்கு பின் தொடர்ச்சியாக 5 முறை, அதாவது 2000ம் ஆண்டு வரை அதே பட்டத்தை தன்னிடம் வைத்திருந்தார். சார்க் விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தாலும், கடந்த 2001ம் ஆண்டுதான் கோபிச்சந்துக்கு பொற்காலம்.

இந்த ஆண்டில் நடந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் கோபிச்சந்த் பட்டையை கிளப்பினார். அந்த காலக்கட்டத்தில் உலகின் முதல் நிலை வீரராக திகழ்ந்த டென்மார்க்கின் பெடர் கெடை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கோபிச்சந்த், சீனாவின் சென் ஹாங்கையும் வீழ்த்தி சாம்பியன் ஆனார். அப்போது பாட்மிண்டன் உலகமே மிரண்டு போனது. இதற்கு முன், 1980ம் ஆண்டு கோபிச்சந்தின் குருநாதர் பிரகாஷ் படுகோன், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட் மிண்டன்'தொடரில் சாம்பியன் ஆகியிருந்தார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு குருநா தர் சாதனையை கோபிச்சந்த் எட்டினார். பாட்மிண்டன் உலகில் கோபிச்சந்த அடைந்த உச்சகட்ட வெற்றி இது.

கடந்த 2003-ம் ஆண்டு, அப்போதைய ஆந்திர அரசு, கோபிச்சந்துக்கு ஹைதரபாத்தில் 5 ஏக்கர் நிலத்தை குறைந்த விலையில் வழங்கியிருந்தது. ஓய்வுக்கு பிறகு, கடந்த 2008 ம்ஆண்டு, அந்த இடத்திலேயே தனது பெயரிலேயே பாட்மிண்டன் அகாடமியைத் தொடங்கினார். சுமார் 2.5 மில்லியன் டாலர் செலவில் 8 கோர்ட்கள், நீச்சல் குளம், பிசியோதெரபி மையம் என சர்வதேச தரத்தில் இந்த அகாடமி மாறியது.

பாட்மிண்டனில், சம்பாதித்த பணத்தின் பெருந்தொகையை நாட்டின் நலனுக்காக செலவ ழிக்கும் ஒரு சில விளையாட்டு வீரர்களில் கோபிச்சந்த் முக்கி யமானவர். கார்கில் போர், குஜராத் நிலநடுக்கத்தின்போது தன்னால் முடிந்த நிதியை நாட்டுக்காக வழங்கியவர். கடந்த 2001ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் கோபிச்சந்த், சாம்பியன் ஆன பிறகு, கோக் நிறுவனம், கோபிச்சந்தை தங்கள் விளம்பரங்களில் நடிக்க அழைப்புவிடுத்தன. ஆனால் இந்த பானங்கள் மக்களுக்கு தீங்கை விளைவிப்பதாக தான் நம்புவதாக கூறி, அதில் நடிக்க மறுத்தவர் கோபிச்சந்த். அதனால்தான் விளையாட்டு உலகின் இரும்பு மனிதர் என்ற பட்டப் பெயரும் அவருக்கு உண்டு.

பாட்மிண்டன் போட்டிகளில் கோபிசந்த்தின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 1999-ல் அவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2001-ல் வழங்கப்பட்டது. கடந்த 2005-ல் பத்ம விருது வழங்கி மத்திய அரசு அவரை மேலும் கவுரவித்தது.

பல்வேறு போட்டிகளில் சாதனைகள் படைத்த போதிலும் கோபிசந்த் ஒலிம்பிக்கில் சாதிக்க வில்லை. அதிகபட்சமாக 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் காலி றுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறியிருந்தார். அப்போது தோல்வியடைந்ததும் சக வீரர் அபர்ணா பொபட்டிடம் ‘என்னால் அடுத்த ஒலிம்பிக்கில் விளையாட முடியுமா என தெரியாது. ஆனால், இந்தியாவுக்கு பதக்கம் வெல்பவ ருக்கு பயிற்சி அளிக்க முடியும்’ என்று கோபிசந்த் தெரிவித்தார்.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம் பிக்கில் சாய்னா வெண்கலம் வென்றதுமே கோபிசந்த் கனவு பலித்தது.

தற்போது சாய்னாவுக்கு போட்டியாக உருவெடுத்துள்ள பி.வி. சிந்து ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட் டுக்கு மட்டும் அல்ல அவரது பயிற்சியாளர் கோபிசந்துக்கும் பெருமையை தேடிக்கொடுத்துள் ளார். சிந்து வெள்ளிப் பதக்கம் வென்ற தில் கோபிசந்தின் பங்களிப்பும் பெருமளவில் உள்ளது.

சிந்து 10 வயதாக இருக்கும் போதே அவருக்கு கோபிசந்த் பயிற்சி அளித்து வருகிறார்.

கடந்த பத்து மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாடமியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். கோபிசந்த் உள்ளிட்ட சில பயிற்சி யாளர்கள் வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தனர். திடீரென சிந்துவை நோக்கி கோபிசந்த் ‘களத்தில் நீ ஆக்ரோஷ மாக கத்தி உணர்வுகளை வெளிப்படுத்தாதவரை, ராக்கெட்டை தொடக்கூடாது’ என உத்தரவிட, திகைத்து நின்றார் சிந்து. இந்த சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் திகைத்து நின்றனர். சிந்துவின் தந்தை ரமணாவும் அதில் ஒருவர்.

இதுதொடர்பாக அவர் சமீபத் தில் கூறும்போது, ‘‘அதிர்ந்து பேசுவதும், ஆர்ப்பரிப்பதும் அவள் இயல்பு அல்ல. திடீரென ஆக்ரோ ஷமாக செயல்பட சொன்னால், அவள் என்ன செய்வாள்? அதனால், எல்லோரும் சென்ற பின், கோபிசந்த் சொன்ன அந்தக் களத்தில் நின்று தன்னந்தனியாக ஓவென கதறி அழுதாள்.

இதை அறிந்த கோபிசந்த், விளையாட்டு அரங்கில் அமைதியாக இருந்தால் வேலைக்காகாது. கோபப்பட வேண்டும்.ஆக்ரோஷப்பட வேண்டும். கத்த வேண்டும். உடல் மொழி கெத்தாக இருக்க வேண்டும். இதுவெல்லாம் எதிரியை அச்சுறுத்தும் ஒரு கருவி என பக்குவமாக எடுத்துரைத்தார்’’ என்றார்.

கோபிசந்த் வார்த்தைகளை ரியோ ஒலிம்பிக்கில் பிரதிபலித்து அசத்தியுள்ளார் சிந்து. பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்ற ரியோசென்ட்ரோ ஹாலில், ஒவ்வொரு புள்ளி எடுத்த பின்பும் சிந்து ஆக்ரோஷமாக கத்தினார். இதைப் பார்த்து இந்திய ரசிகர்களும் அவரை உற்சாகமூட்டினர். இதனால் கூடுதல் பலமும் சிந்துவுக்கு கிடைத்தது.தொழில்நுட்ப ரீதியாகவும் சிந்துவை கோபிசந்த் மெருகேற்ற தவறவில்லை. எதிராளியின் பலம், பலவீனங்களுக்கு தகுந்தபடி சிந்துவை ஒவ்வொரு போட்டிக்கும் தயார் செய்தார்.

வீரராகதான் சாதிக்காததை 16 வருடகாலத்துக்கு ஒரு பயிற்சியாளராக சாதித்துக் காட்டியுள்ளார் கோபிசந்த். பயிற்சியில் இவரது சாதனைகள் தொடரட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x