Last Updated : 24 Mar, 2018 04:27 PM

 

Published : 24 Mar 2018 04:27 PM
Last Updated : 24 Mar 2018 04:27 PM

தலைகுனிவுதான் அதற்காக ஓடி ஒளியவா முடியும்?- இங்கிலாந்து சரிவு குறித்து கிரஹாம் தோர்ப்

ஒரு அணி ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்து கொண்டிருக்கும் போதே திடீரென ஒரு அருமையான பந்து வீச்சு அல்லது பொறுப்பற்ற பேட்டிங் ஆகியவற்றினால் சிறுமை ஏற்படும் என்பது கிரிக்கெட் அல்ல எந்த ஒரு விளையாட்டிலும் தவிர்க்க முடியாததே என்பதாக சூசகமாகத் தெரிவிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப், 58 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணிக்காக வாதாடுகிறார்.

ஆக்லாந்து டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டமும் 17 பந்துகள் வீசிய பிறகு மழை காரணமாக தொடர முடியாமல் கைவிடப்பட்டுள்ளது, இங்கிலாந்து 58 ரன்களில் சுருள, நியூஸிலாந்து அணி கேன் வில்லியம்சனின் (102) சாதனை உடைப்பு சதத்தினால் 233/4 என்று வலுவாக உள்ளது. ஹென்றி நிகோல்ஸ் 52 ரன்களுடனும் வாட்லிங் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் பரிதாப நிலை குறித்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“மழையின் உதவியால் டெஸ்ட் போட்டியை டிரா செய்து விடலாம்” என்று கூறும் கிரஹாம் தோர்ப், அதுவும் கூட உத்தரவாதமாகக் கூற முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் 2வது ஆகக்குறைவான 46 ஆல் அவுட் இன்னிங்ஸின் போது சரிவை நேரில் சந்தித்தவர் கிரஹாம் தோர்ப்.

1994-ம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மே.இ.தீவுகளுக்கு எதிராக 2வது இன்னிங்சில் 46 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து.

இந்நிலையில் ஆக்லாந்தில் கிரஹாம் தோர்ப் கூறியதாவது:

மனம் என்பதுதான் மிக மிக முக்கியமானது, என் கிரிக்கெட் வாழ்க்கையும் இதில் கொஞ்சம் வரவே செய்யும். ஆம் நம் பெருமைக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, அதற்காக நம்மை நாமே குறைகூறி கழிவிரக்கம் கொள்வதில் பயனொன்றுமில்லை, மலைக்குகையிலோ, கட்டிலுக்கு அடியிலோ சென்று ஓடி ஒளியவா முடியும்? அடுத்து வேலையைத் திறம்படச் செய்யத் தயாராக வேண்டும்.

வீரர்கள் நடந்ததை நினைத்து கவலைப்படும் மனநிலையிலிருந்து விடுபடவேண்டும். இன்னும் 2 நாட்களுக்கு மழையற்ற ந்ல்ல வானிலை அமையும் என்று கணிப்பு கூறும்போது அந்த 2 நாள் ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மழை கொஞ்சம் நமக்கு உதவியுள்ளது, ஆனாலும் தோல்வியிலிருந்து மீண்டு விட்டோம் என்று கூறுவதற்கில்லை. முதல் இன்னிங்சை காட்டிலும் நன்றாக ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

2வது இன்னிங்சில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய திறமை உள்ளது. ஆட்டத்தை ட்ரா செய்ய முடியும்.

பிரச்சினை என்னவெனில் ஸ்விங் பந்துகளை நாம் சரியாக ஆடவில்லை, ஒருவரும் ஆடுவதில்லை, இதனால் ஆட்டத்தில் காலூன்ற முடியவில்லை.

போல்ட் துல்லியமாக பந்துகளை வீசினார், ஆனால் 15 ஓவர்களுக்குத்தான் ஸ்விங் அச்சுறுத்தல். யாரும் அவுட் ஆகவேண்டும் என்று ஆடுவதில்லை, சில வேளைகளில் இப்படி நடந்து விடுவதுண்டு, ஓய்வறையை கொஞ்சம் அசைக்கவேண்டும், தனிப்பட்ட வீரர்களை கொஞ்சம் அசைத்துப் பார்க்க வேண்டும்.

மனம்தான் முக்கியமானது. போராடத் துணிய வேண்டும். பிரச்சினைகளுக்கு நம்மிடம் இல்லாத விடைகளைக் கண்டுபிடித்து மீதமுள்ள 2 நாட்களில் சரியாக ஆட வேண்டும்” என்றார் கிரஹாம் தோர்ப்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x