Published : 28 Mar 2018 12:25 PM
Last Updated : 28 Mar 2018 12:25 PM
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.
இந்த தகவலை சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சண்முகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பந்தை திட்டமிட்டு சேதப்படுத்தினோம் என்பதை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத்தடையும், போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டது. மேலும், துணைக் கேப்டன் வார்னருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கொதித்துப் போன ஆஸ்திரேலிய நாட்டு அரசு, ஸ்மித், வார்னர் இருவரின் கேப்டன் பதவிகளையும் பறித்து தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் நீக்கியது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும, தென் ஆப்பிரிக்காவில் இருந்து உடனடியாக ஸ்மித், பான்கிராப்ட், வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியா புறப்பட நேற்று இரவு கிரிக்கெட் ஆஸ்திரேலியா சிஇஓ ஜேம்ஸ் சதர்லாந்து உத்தரவிட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்த ஸ்டீவ் ஸ்மித் தனது பதவியை கடந்த இரு நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அதற்கு பதிலாக அஜின்கயே ரஹானே நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். இது குறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சண்முகம் ட்விட்டரில் கூறுகையில், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டேவிட் வார்னர் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். விரைவில் புதிய கேப்டன் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT