Last Updated : 07 Mar, 2018 04:10 PM

 

Published : 07 Mar 2018 04:10 PM
Last Updated : 07 Mar 2018 04:10 PM

உலகின் சிறந்த பேட்ஸ்மெனாகத் திகழ கோலி என்ன செய்ய வேண்டும்? - கபில் தேவ் அறிவுரை

இங்கிலாந்து தொடருக்கு முன்பாக கேப்டன் விராட் கோலி தன் பேட்டிங்கை அந்தப் பிட்ச்களில் மேம்படுத்திக் கொள்ள இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆடுவது தவறாகாது, அது அவருகு உதவும் என்று கபில்தேவ் கருத்துக் கூறியுள்ளார்.

இந்திய வீரர்களில் ஏறக்குறைய பல வீரர்கள் இங்கிலாந்து கவுண்ட்டியில் ஆடியுள்ளனர், கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சேவாக் உள்ளிட்ட ஜாம்பவான்களே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியுள்ளனர். ஆனால் விராட் கோலி இப்போதுள்ள டைட் ஷெட்யூலில் அத்தகைய முடிவை எடுப்பவராகத் தெரியவில்லை.

ஆகஸ்ட் மாதம் இந்தியா இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இந்நிலையில் கபில்தேவ் கூறியதாவது:

பயிற்சி ஒரு மனிதனை முழுமையடையச் செய்கிறது. அந்தப் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பயில வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பிட்ச்களிலும் ஆட வேண்டும் என்பதே உலகின் சிறந்த வீரர் என்பதற்கான அளவுகோல்.

இதைத்தான் ஆலன் போர்டர், விவ் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் ஆகியோர் மூலம் நாம் சொல்ல வருவது. இவர்கள் எந்தச் சூழ்நிலையிலும், எந்த நாட்டிலும் ரன்கள் குவித்தவர்கள்.

இந்த வகையில் விராட் கோலி மீது ஒரு கேள்விக்குறி இருக்கிறது. ஆம் கேள்விக்குறி உள்ளது. உலகிலேயே கடினமான இடம், ரன்கள் எடுப்பது எளிதல்ல என்று கருதப்படும் இங்கிலாந்தில் கோலி ரன்கள் எடுக்க வேண்டும். (கடந்த இங்கிலாந்து தொடரில் கோலியின் சராசரி 13.40).

அவரது பொறுமை மீது நமக்கு ஐயமில்லை, அவர் நன்றாகவே இப்போது ஆடி வருகிறார். இங்கிலாந்தில் நல்ல தொடக்க கண்டால் அவருக்கு நல்லது, அவரிடம் திறமை உள்ளது. இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஓரிரண்டு சீசன்களில் அவர் ஆடினால் தவறில்லை. ஏனெனில் உலகின் தலைசிறந்த வீரராக வேண்டுமென்று அவர் விரும்பினால் அனைத்து இடங்களிலும் ரன்கள் குவிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் கபில்தேவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x